K-pop இசையை கேட்டதற்காக 22 வயது இளைஞரை தூக்கிலிட்டது வட கொரியா
K-pop இசையை கேட்டதற்காகவும் பகிர்ந்ததற்காகவும் 22 வயது இளைஞருக்கு வட கொரியா அதிகாரிகள் பகிரங்கமாக மரண தண்டனை விதித்துள்ளனர் என்று தென் கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட மனித உரிமைகள் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வட கொரியாவின் தென் ஹ்வாங்கே மாகாணத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் 2022ஆம் ஆண்டில் 70 தென் கொரியப் பாடல்களைக் கேட்டதற்காகவும், மூன்று படங்களைப் பார்த்ததற்காகவும், அவற்றைப் பகிர்ந்ததற்காகவும் குற்றவாளி எனக் கண்டறியப்பட்ட பின்னர் தூக்கிலிடப்பட்டார் என அந்த மனித உரிமை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. "முற்போக்கு சித்தாந்தம் மற்றும் கலாச்சாரத்தை" தடைசெய்யும் வட கொரியாவின் 2020 சட்டத்தை மீறியதாக அந்த இளைஞர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
தீவிரமடைந்து வரும் வட கொரிய ஒடுக்குமுறைகள்
வட கொரியர்களை மேற்கு கலாச்சாரத்தின் மோசமான தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் பரந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தென் கொரிய பாப் கலாச்சாரம் மீதான தடையை வட கொரியா விதித்தது. வட கொரிய அதிபர் கிம் ஜாங்-இல் என்பரால் அறிமுகபடுத்தப்பட்ட இந்த தடை, அவரது மகன் கிம் ஜாங்-உன்யின் கீழ் தீவிரமடைந்ததது என்பது குறிப்பிடத்தக்கது. K-pop மற்றும் K-நாடகங்கள் தென் கொரிய திரைப்படம் மற்றும் இசை பொழுதுபோக்கின் வடிவங்களாகும். உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று வரும் தென் கொரிய பொழுதுபோக்கு வடிவங்கள், வட கொரியாவில் முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது.