
வெளிநாட்டில் ஒரே டெஸ்டில் இரண்டு சதங்கள் அடித்த முதல் விக்கெட் கீப்பர்; ரிஷப் பண்ட் சாதனை
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பண்ட், லீட்ஸில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில், இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து புதிய வரலாறு படைத்தார். முதல் இன்னிங்ஸில் 134 ரன்கள் எடுத்த பிறகு, இரண்டாவது இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடி மற்றுமொரு சதத்தை பூர்த்தி செய்தார். போட்டியின் நான்காம் நாள், காலை அமர்வில் ஒழுக்கமான ஷாட் தேர்வோடு இன்னிங்ஸைத் தொடங்கிய பண்ட், பின்னர் மதியம் தனது தனித்துவமான திறமையுடன் விளையாடினார். அவரது குறிப்பிடத்தக்க சாதனை அவரை சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு தனித்துவமான நபராக தனித்து நிற்க வைக்கிறது. அதாவது இதுவரை, எந்த விக்கெட் கீப்பரும் வெளிநாடுகளில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்களை அடித்ததில்லை.
இரண்டு சதங்கள்
இரண்டு சதங்கள் அடித்த இரண்டாவது விக்கெட் கீப்பர்
குறிப்பிடத்தக்க வகையில் ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் ஒரு இன்னிங்ஸில் சதம் மற்றும் மற்றொரு இன்னிங்ஸில் அரைசதம் விளாசிய சிலர் இருந்தபோதும், இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்தது இரண்டு பேர் மட்டுமே. இந்த சாதனையை முதலில் செய்த விக்கெட் கீப்பர் ஜிம்பாப்வேயின் ஆண்டி ஃப்ளவர் ஆவார். அவர் 2001 ஆம் ஆண்டு ஹராரேவில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்த சாதனையை நிகழ்த்தினார். அவர் உள்நாட்டு மைதானத்தில் இந்த சாதனையை படைத்திருந்தார். அதன் பின்னர் ரிஷப் பண்ட் மட்டுமே அதுபோன்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கிடையே, கே.எல்,ராகுலும் சதமடித்த நிலையில், இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது.