"பலாத்கார காட்சியே இல்லை": த்ரிஷா குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மறுத்தார் மன்சூர் அலிகான்
சர்ச்சை பேச்சுக்கு பெயர் போன நடிகர் மன்சூர் அலிகான், லியோ திரைப்படத்தில் தனக்கு பாலியல் பலாத்கார காட்சிகள் கிடைக்கவில்லை என்று கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரது இந்த அருவருக்கத்தக்க பேச்சுக்கு 'லியோ' திரைப்பட நடிகை த்ரிஷா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், த்ரிஷா, இனி அவருடன் தான் இணைந்து நடிக்கப்போவதில்லை என்று கூறியுள்ளார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கும் மன்சூர் அலிகான், தான் நகைச்சுவைக்காக அப்படி பேசியதாகவும், அந்த பேட்டியில் தான் பேசிய பாதி வார்த்தைகளை மட்டும் பரப்பி சிலர் தனது அரசியல் வாழ்க்கையை கெடுக்க முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், தான் தவறு ஏதும் செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.