
தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: ஜூன் 4 வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று முதல் ஜூன் 4 வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று மாற்றம் அடைந்ததால், தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று நீலகிரி, கோவை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், தேனி மாவட்டத்தில் சில இடங்களிலும் மழை பதிவானது.
அவலாஞ்சியில் 19 செ.மீ., சின்னக்கல்லாரில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
நாளை முதல் ஜூன் 4 வரை, தமிழகத்தில் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
நீலகிரி
நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்கள் மூடல்
முன்னதாக கடந்த 2 நாட்களாக நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி, கூடலூர், பந்தலூர் மற்றும் குந்தா பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை தொடர்ந்து கொட்டித் தீர்க்கிறது.
இதன் விளைவாக, பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. மண் சரிவு ஏற்பட்டு முக்கிய சாலைகளில் போக்குவரத்து முடங்கி உள்ளது.
மழை மற்றும் காற்றால் மின் விநியோகம் மற்றும் குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
விபத்துகள் ஏற்படாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய சுற்றுலா தலங்கள்—தொட்டபெட்டா, அவலாஞ்சி, டால்பின் நோஸ், பைக்காரா நீர்வீழ்ச்சி, அரசு தாவரவியல் பூங்கா மற்றும் ரோஜா பூங்கா—தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இன்றும், நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.