மொராக்கோ எல்லையில் கட்டுக்கடங்காத அகதிகள் கூட்டம்! 9 பேர் உயிரிழப்பு; ராணுவத்தை களமிறக்கியது ஸ்பெயின்
செய்தி முன்னோட்டம்
மொராக்கோவிலிருந்து ஆயிரக்கணக்கான அகதிகள் ஒரே நேரத்தில் கடல் வழியிலும், எல்லை வேலி வழியாகவும் ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள செவுட்டா பகுதிக்குள் நுழைந்ததால் அங்கு பெரும் பாதுகாப்பு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் ஊடுருவலின் போது ஏற்பட்ட அசம்பாவிதங்களில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளனர். நிலைமையை சீர்செய்யவும், எல்லைப் பாதுகாப்பை மீட்டெடுக்கவும் உடனடியாக ராணுவத்தைக் களமிறக்க ஸ்பெயின் அரசு உத்தரவிட்டுள்ளது.
அதிகாரிகள் கவலை
முற்றிலும் கட்டுப்பாட்டை இழந்த எல்லை
செவுட்டாவின் தாரஜல் எல்லைப் பகுதி வழியாக ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்கிய ஆயிரக்கணக்கானோர் ஸ்பெயின் எல்லைக்குள் நுழைந்தனர்.
இதுகுறித்து எல்லையை பாதுகாக்கும் ஸ்பெயினின் சிவில் கார்டு அமைப்பின் அதிகாரி ரஷித் ஸ்பிஹி கூறுகையில், "எல்லைப் பகுதி முற்றிலும் கட்டுப்பாட்டை இழந்துவிட்டது.
எல்லைக்குள் நுழைந்தவர்களின் துல்லியமான எண்ணிக்கையை உடனே கணக்கிட முடியாத அளவிற்கு நிலைமை தீவிரமாக உள்ளது." எனக் கவலை தெரிவித்துள்ளார்.
நேரில் ஆய்வு
நேரில் சென்று ஆய்வு செய்யும் ஸ்பெயின் பிரதமர்
சூழலின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் மற்றும் உள்துறை அமைச்சர் பெர்னாண்டோ கிராண்டே-மர்லாஸ்கா ஆகியோர் நிலமையை நேரில் ஆய்வு செய்ய செவுட்டாவிற்கு பயணம் மேற்கொள்கின்றனர்.
ஏற்கனவே செவுட்டாவில் உள்ள அகதிகள் முகாம்கள் அனைத்தும் நிரம்பி வழியும் நிலையில், தேசிய அவசர நிலையை அறிவிக்க வேண்டும் என செவுட்டா பிராந்திய தலைவர் விக்டர் விவாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
கூட்டு நடவடிக்கை
கூட்டு நடவடிக்கையில் ஸ்பெயின் மற்றும் மொராக்கோ
தற்போது மொராக்கோ நாட்டுப் பாதுகாப்புப் படையினரும் எல்லையில் கூடுதல் அகதிகள் நுழைவதைத் தடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், சட்டவிரோதமாக எல்லைக்குள்ளே நுழைந்தவர்களை சட்டப்படி மீண்டும் மொராக்கோவிற்கே உடனடியாகத் திருப்பி அனுப்புவது தொடர்பாக இரு நாட்டு அரசுகளும் இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டுள்ளன.
2021 சம்பவம்
2021 எல்லை நெருக்கடியை நினைவூட்டும் சம்பவம்
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலப்பரப்பு எல்லையாக ஆப்பிரிக்கக் கண்டத்தில் அமைந்துள்ள செவுட்டா பகுதி, நீண்டகாலமாகவே அகதிகள் ஐரோப்பாவிற்குள் நுழையும் முக்கிய மையமாக விளங்கி வருகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டிலும் ஒரே நேரத்தில் 8,000க்கும் மேற்பட்ட அகதிகள் செவுட்டாவிற்குள் நுழைந்தது இரு நாடுகளுக்கும் இடையே ராஜதந்திர பதற்றத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.