LOADING...
தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Sep 08, 2025
09:03 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் தெற்கு மாவட்டங்களில் சுழற்சி காரணமாக, இன்று,(செப்டம்பர் 8) தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய நான்கு மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அதிகபட்சமாக தலா 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதையடுத்து, விழுப்புரம் மாவட்டம் வல்லம் மற்றும் சென்னை மணலி புதுநகர் பகுதிகளில் தலா 9 செ.மீ., ஆனந்தபுரம் (விழுப்புரம்), செட்டிகுளம் (பெரம்பலூர்), வத்தலை அணைக்கட்டு (திருச்சி) பகுதிகளில் தலா 7 செ.மீ. மழையும், சேலம் ஏற்காடு பகுதியில் 6 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளன.

மழை

நாளையும் மித மழைக்கு வாய்ப்பு உண்டு

தென் தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுவதால், இன்று மற்றும் நாளை தமிழகத்தின் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அத்துடன், நாளை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் கனமழை இருக்கக்கூடும் என கூறப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை சாத்தியமுள்ளது. இதே நேரத்தில், தமிழகத்தின் தென் மாவட்டங்களின் கடலோரங்கள், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்றும் மற்றும் நாளையும் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில், இடையிடையே 60 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.