2023 Year Roundup- விருதுகள் வென்ற இந்திய சினிமாக்கள் ஒரு பார்வை
சினிமா விருதுகளைப் பொறுத்தவரையில் இந்திய சினிமாவிற்கு இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாகவே அமைந்தது. நீண்ட காலத்திற்கு பிறகு இந்தியாவைச் சேர்ந்த இரண்டு படைப்புகளுக்கு ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன. மேலும், குறிப்பிடத்தக்க வகையில் இரண்டு தமிழ் படங்களுக்கும் தேசிய விருதுகள் கிடைத்தன. இருப்பினும் ஆஸ்கர் முதல் தேசிய விருதுகள் வரை, ராஜமௌலி இயக்கிய ஆர்ஆர்ஆர் திரைப்படமே ஆட்சி செய்தது. இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க தேசிய விருதுகளை வென்ற திரைப்படங்கள் ஒரு பார்வை.
நாட்டு நாட்டு பாடல், ஆஸ்கர் விருது- சிறந்த ஒரிஜினல் பாடல்
பாகுபலி இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில், ராம்சரன், ஜூனியர் என்டிஆர் நடித்திருந்த ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு, சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது வென்றது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் நடந்த 95வது ஆஸ்கர் விழாவில், ஒரு தசாப்தத்திற்கு பின்னர் இந்தியாவிற்கு ஆஸ்கர் விருது இப்பாடலுக்காக கிடைத்தது. ஏற்கனவே இப்படம் கோல்டன் குளோப் விருதை வென்றிருந்த நிலையில், இப்பாடலுக்கு இசையமைத்ததற்காக இசையமைப்பாளர் கீரவாணி ஆஸ்கர் விருது பெற்றார்.
தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ், ஆஸ்கர் விருது- சிறந்த சிறு ஆவணப்படம்
இந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்கர் விழாவில் சிறந்த சிறு ஆவண படத்திற்கான விருதை, கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கிய தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படம் பெற்றது. தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில், கார்த்திகி பழங்குடியின தம்பதிகளான பெள்ளி, பொம்மன் வாழ்க்கையை ஆவணப்படுத்தி இருந்தார். தர்மபுரி மாவட்டத்தில் தாயை பிரிந்து பலத்த காயங்களுடன் மீட்கப்படும் குட்டி யானை, முதுமலை கொண்டுவரப்படுகிறது. அந்த யானையை பராமரிக்க யாரும் முன்வராத போது, அப்பணியை பொம்மன் ஏற்கிறார். உடன் பெள்ளி இணைந்து கொள்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து, ராகு என பெயரிட்டு அந்த யானையை வளர்ப்பதை, தனது கேமராவால் கார்த்திகி பதிவு செய்திருந்தார்.
கடைசி விவசாயி, தேசிய விருது- சிறந்த தமிழ் படம், சிறப்பு ஜூரி விருது
கடந்த 2022 ஆம் ஆண்டு விஜய் சேதுபதியின் நடிப்பில் காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டன், கடைசி விவசாயி என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் மாயாண்டி என்ற கடைசி விவசாயி கதாபாத்திரத்தில், மதுரை அடுத்த உசிலம்பட்டி அருகில் உள்ள பெருங்காமநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த நல்லாண்டி என்பவர் நடித்திருந்தார். ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்ட 69ஆவது தேசிய திரைப்பட விருதுகளில், சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை இப்படம் தட்டிச் சென்ற நிலையில், நல்லாண்டிக்கு சிறந்த நடிகருக்கான சிறப்பு ஜூரி விருதும் அறிவிக்கப்பட்டது. கடைசி விவசாயி படத்தில் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்த நல்லாண்டி, படம் வெளியாகுவதற்கு சிறிது நாட்கள் முன்னரே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இரவின் நிழல், தேசிய விருது- சிறந்த பின்னணி பாடகி
சில திரைப்படங்கள் அறிவிக்கப்பட்ட உடனே அவற்றுக்கு விருதுகள் கிடைக்கும் என்பதை நாம் உறுதிப்படுத்தி விடலாம். அப்படிப்பட்ட ஒரு படம் தான் இரவின் நிழல். பார்த்திபன் இயக்கி நடித்துள்ள இப்படத்தில், பல புதுமையான முயற்சிகளை கையாண்டு இருந்தார். படம் முழுவதும் 'நான் லீனியர்' முறையில் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டு இருந்தது. டெக்னிக்கல் விஷயத்தில் பார்த்திபன் கவனம் செலுத்திய அளவிற்கு, படத்தின் பிற்பகுதியில் வரும் காட்சிகளுக்கு தேவையான அழுத்தம் வழங்கவில்லை என கூறப்பட்டது. இருப்பினும் படம் ரசிகர்களின் கவனத்தைப் பெற தவறவில்லை. வேறு, பிரிவுகளில் விருது வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாயவா சாயவா பாடலை பாடியதற்காக, ஸ்ரேயா கோஷல், சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை வென்றார்.
ராக்கெட்ரி நம்பி எஃபெக்ட், தேசிய விருது - சிறந்த படம்
கேரளாவை சேர்ந்த சர்ச்சைக்குரிய விஞ்ஞானியான நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படம் ராக்கெட்ரி நம்பி எஃபெக்ட். இப்படத்தை இயக்கி, நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் மாதவன் நடித்திருந்தார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்து வந்த நம்பி, 1994 ஆம் ஆண்டு உலவு பார்த்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இருந்து பெரும் சட்டப் போராட்டத்திற்கு பின்னர் விடுதலையான நம்பிக்கு, கேரளா அரசு இழப்பீடாக ₹1.50 கோடியை 2020 ஆம் ஆண்டு வழங்கியது.
புஷ்பா, தேசிய விருது- சிறந்த இசையமைப்பாளர் (பாடல்கள்),சிறந்த நடிகர்
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ராஸ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம், இரண்டு பிரிவுகளில் தேசிய விருதுகளை அள்ளியது. சிறந்த இசையமைப்பாளர்(பாடல்கள்) பிரிவில் படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை அல்லு அர்ஜுனும் தட்டிச் சென்றனர். ஆந்திராவில் நடக்கும் செம்மரக்கட்டை கடத்தல் தொடர்பான கதையை இயக்குனர் படமாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் அடுத்த பாகம் தற்போது தயாராகி வருகிறது.
ஆர்ஆர்ஆர், தேசிய விருது - பின்னணி இசை, சிறந்த பின்னணி பாடகர் ஆண், சிறந்த நடன அமைப்பாளர், சிறந்த ஸ்டண்ட் கோரியோகிராஃபி
ஆஸ்கர், கோல்டன் குலோப் உள்ளிட்ட விருதுகளை அள்ளிய ஆர்ஆர்ஆர் திரைப்படம், தேசிய திரைப்பட விருதுகளையும் ஆட்சி செய்தது. ஆஸ்கர் வென்ற இசையமைப்பாளர் கீரவாணி, இப்படத்திற்காக சிறந்த இசை இயக்கம் (பின்னணி இசை) பிரிவில் தேசிய விருது வென்றார். மேலும் இப்படத்திற்காக சிறந்த பின்னணி பாடகர் ஆண் பிரிவில், கால பைரவா தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது. பிரேம் ரக்ஷித் இதே படத்திற்காக சிறந்த நடன அமைப்பாளர் விருதையும்,கிங் சாலமன், சிறந்த ஸ்டண்ட் கோரியோகிராஃபி பிரிவில் தேசிய விருதுகளையும் வென்றனர்.