Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
இங்கிலாந்து கிரிக்கெட் அணி 2024 ஜனவரி 25 முதல் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா வர உள்ளது. இந்த தொடர் தொடங்க இன்னும் இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், அந்த அணியின் டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இடது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். அறுவை சிகிச்சைக்கு பிறகு ஊன்றுகோலுடன் இருக்கும் புகைப்படத்தையும் பென் ஸ்டோக்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு முழு உடற்தகுதி பெறும்போது மீண்டும் ஒரு முழு ஆல்ரவுண்டராக மாற முடியும் என்று அவர் நம்புகிறார். முன்னதாக, 2023 ஆஷஸ் தொடரிலிருந்து அவரால் சரியாக பந்துவீச முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் ஹசாரே கோப்பையில் பரோடாவை வீழ்த்தியது தமிழகம்
விஜய் ஹசாரே கோப்பை 2023-24 தொடரில் புதன்கிழமை (நவம்பர் 29) பரோடாவை எதிர்கொண்ட தமிழ்நாடு கிரிக்கெட் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முன்னதாக, போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தமிழகம் பரோடா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 162 ரன்களுக்கு சுருண்டது. தினேஷ் கார்த்திக் மட்டும் அரைசதம் கடந்து 68 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து எளிய இலக்குடன் களமிறங்கிய பரோடா அணி 124 ரன்களுக்கு சுருண்டு தோற்றது. அபாரமாக பந்துவீசிய தமிழக வீரர் டி நடராஜன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் நடப்பு சீசனில் தமிழ்நாடு இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. விரிவாக படிக்க
2024இல் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்கிறது இந்திய கிரிக்கெட் அணி
2024 டி20 உலகக்கோப்பை முடிவடைந்த பிறகு ஜூலை மாதம் இந்திய கிரிக்கெட் அணி 6 போட்டிகள் கொண்ட ஒயிட் பால் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இலங்கை செல்ல உள்ளது. இலங்கை கிரிக்கெட் வாரியம் புதன்கிழமை வெளியிட்ட 2024க்கான இலங்கை கிரிக்கெட் அணியின் போட்டி அட்டவணையில் இதை உறுதிப்படுத்தி உள்ளது. இதன் படி மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் இந்திய அணி இலங்கைக்கு எதிராக விளையாட உள்ளது. இதற்கிடையே, இலங்கை கிரிக்கெட் வாரிய அட்டவணையின்படி இலங்கை அணி 2024இல் 10 டெஸ்ட் மற்றும் தலா 21 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் என மொத்தம் 52 சர்வதேச போட்டிகளில் விளையாட உள்ளது. விரிவாக படிக்க
ஒயிட் பால் கிரிக்கெட்டில் இருந்து பிரேக் எடுக்க விராட் கோலி முடிவு என தகவல்
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தன்னை காலவரையறை இன்றி தேர்வு செய்ய வேண்டாம் என இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பிசிசிஐக்கு தெரியப்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2022 டி20 உலகக்கோப்பைக்கு பிறகு விராட் கோலி எந்தவொரு டி20 போட்டியிலும் இந்திய அணிக்காக விளையாடவில்லை. இந்நிலையில், தற்போது நடந்த முடிந்த ஒருநாள் உலகக்கோப்பைக்கு பிறகு, ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்தும் விலகி டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்த விராட் கோலி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், 2025 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாட முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. விரிவாக படிக்க
விஜய் ஹசாரே கோப்பையில் சத்தீஸ்கர் ஆல்ரவுண்டர் ஷஷாங்க் சிங் சாதனை
புதன்கிழமை நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் மணிப்பூருக்கு எதிராக விளையாடிய சத்தீஸ்கர் அணியின் ஆல்ரவுண்டர் ஷஷாங்க் சிங் பேட்டிங்கில் 152 ரன்கள் எடுத்ததோடு, 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றில் ஒரே போட்டியில் 150+ ரன்களும் 5 விக்கெட்டுகளும் எடுத்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனை படைத்தார். மேலும், சர்வதேச அளவில் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இந்த சாதனையை செய்த மூன்றாவது வீரர் ஆனார். முன்னதாக, வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் ஆல்வின் கல்லிச்சரண் (206 ரன்கள், 6 விக்கெட்டுகள்) மற்றும் மைக் ப்ராக்டர் (154* ரன்கள், 5 விக்கெட்டுகள்) ஆகியோர் மட்டுமே லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இந்த சாதனையை செய்துள்ளனர். விரிவாக படிக்க