இந்திய லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை; ஆல்ரவுண்டர் ஷஷாங்க் சிங் சாதனை
விஜய் ஹசாரே கோப்பையில் சத்தீஸ்கர் கிரிக்கெட் அணி புதன்கிழமை (நவம்பர் 29) மணிப்பூரை எதிர்கொண்டு 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சத்தீஸ்கர் 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 342 ரன்கள் குவித்தது. சத்தீஸ்கர் அணியின் ஆல்ரவுண்டர் ஷஷாங்க் சிங் 152 ரன்களும், கேப்டன் அமன்தீப் கார் 88 ரன்களும் எடுத்தனர். கடினமான இலக்குடன் களமிறங்கிய மணிப்பூர் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. மணிப்பூரின் பிரபுல்லோமணி சிங் 67 ரன்களும், லாங்லோனியாம்பா கெய்ஷாங்பாம் 61 ரன்களும் எடுத்தனர். சத்தீஸ்கர் ஆல்ரவுண்டர் ஷஷாங்க் சிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சர்வதேச அளவில் மூன்றாவது வீரராக சாதனை படைத்த ஷஷாங்க் சிங்
மேலே குறிப்பிட்டுள்ளபடி சத்தீஸ்கர் ஆல்ரவுண்டர் ஷஷாங்க் சிங் சதமடித்து 152 ரன்கள் எடுத்ததோடு, சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்ததோடு, லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் 150 ரன்கள் எடுத்ததோடு, 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இரட்டை சாதனை படைத்த முதல் இந்தியர் ஆனார். மேலும், சர்வதேச அளவில் இந்த சாதனையை செய்த மூன்றாவது வீரராகவும் ஆனார். இதற்கு முன்னதாக, வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் ஆல்வின் கல்லிச்சரண் (206 ரன்கள், 6 விக்கெட்டுகள்) மற்றும் மைக் ப்ராக்டர் (154* ரன்கள், 5 விக்கெட்டுகள்) ஆகியோர் மட்டுமே லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இந்த சாதனையை படைத்துள்ளனர்.