Loading...
சிந்து நதி நீர் ஒப்பந்தம்: கனடாவின் உதவியை நாடும் பாகிஸ்தான்! இந்தியாவின் நிலைப்பாடு என்ன?
இந்தியாவுக்கு அழுத்தம் தருமாறு, கனடா நாட்டின் ஆதரவை பாகிஸ்தான் கோரியுள்ளது

சிந்து நதி நீர் ஒப்பந்தம்: கனடாவின் உதவியை நாடும் பாகிஸ்தான்! இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

எழுதியவர் Venkatalakshmi V
Jul 21, 2026
11:11 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீண்டும் அமல்படுத்த இந்தியாவுக்கு அழுத்தம் தருமாறு, கனடா நாட்டின் ஆதரவை பாகிஸ்தான் பகிரங்கமாகக் கோரியுள்ளது. பாகிஸ்தானுக்கு இரண்டு நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் அனிதா ஆனந்துடன் இணைந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

முறையீடு

பாகிஸ்தானின் முறையீடு

1960-ல் எட்டப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ், கிழக்கு நதிகளின் உரிமை இந்தியாவுக்கும், மேற்கு நதிகளின் உரிமை பாகிஸ்தானுக்கும் வழங்கப்பட்டது.

கடந்த 2025 ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் முற்றிலும் நிறுத்தும் வரை இந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக இந்தியா அதிரடியாக அறிவித்தது.

இது குறித்து இஷாக் தார்,"சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது, ஏற்கனவே பதற்றமாக இருக்கும் பிராந்திய பாதுகாப்பில் புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. தண்ணீரை ஆயுதமாக்குவதை நிறுத்தி, சர்வதேச சட்டங்களின்படி ஒப்பந்தத்தை உடனடியாக புதுப்பிக்க இந்தியாவுக்கு அறிவுறுத்த கனடா உள்ளிட்ட நட்பு நாடுகள் எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்" என்றார்.

நிலைப்பாடு

தற்போதைய வடிவத்தில் ஒப்பந்தம் செயல்படாது: இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு

பாகிஸ்தான் சர்வதேச அளவில் ஆதரவு திரட்ட முயன்றாலும், இந்திய அரசு தனது நிலைப்பாட்டில் மேலும் உறுதியாக உள்ளது.

60 ஆண்டுகள் பழமையான இந்த ஒப்பந்தம் தற்போதைய வடிவத்தில் இனி செயல்பட முடியாது என்பதில் இந்தியா தெளிவாக உள்ளது.

பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நம்பகத்தன்மையுடனும் திரும்பப் பெற முடியாத வகையிலும் நிறுத்தும் வரை ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் என்றும், எதிர்காலத்தில் நதிநீர் பகிர்வு மீண்டும் விவாதிக்கப்பட்டாலும், அது புதிய மாற்றியமைக்கப்பட்ட விதிமுறைகளின் கீழ் மட்டுமே நடக்கும் என்றும் இந்தியா கூறுகிறது.

பாகிஸ்தானின் பிரச்சனை நீர் தட்டுப்பாடு அல்ல, நீர் மேலாண்மை இன்மையே; இந்தியா தனது உரிமையுள்ள நதிநீரை செனாப் நீர்மின் திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு நவீனமயமாக்கல் மூலம் முழுமையாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

ADVERTISEMENT