விஜய் ஹசாரே கோப்பை: நடராஜன் அபார பந்துவீச்சு; 38 ரன்கள் வித்தியாசத்தில் தமிழகம் வெற்றி
விஜய் ஹசாரே கோப்பை 2023-24 தொடரில் புதன்கிழமை (நவம்பர் 29) நடைபெற்ற ஆட்டத்தில் டி நடராஜனின் அபார பந்துவீச்சால் தமிழ்நாடு கிரிக்கெட் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக, மும்பையில் உள்ள ஷரத் பவார் கிரிக்கெட் அகாடெமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பரோடா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த தமிழக அணியில் தினேஷ் கார்த்திக் 68 ரன்களும், ஷாருக் கான் 31 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், 33.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. பரோடா அணியில் மெரிவாலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
4 விக்கெட்டுகளை வீழ்த்திய நடராஜன்
163 ரன்கள் எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய பரோடா அணிக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழக அணியின் சந்தீப் முதல் ஓவரிலேயே பரோடா தொடக்க ஆட்டக்காரர் ஜியோத்னில் சிங்கை டக்கவுட் ஆக்கினார். தொடர்ந்து தமிழக வீரர் டி நடராஜன் பரோடா அணியின் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளையும், வரும் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதில் நிலைகுலைந்த பரோடா 23.2 ஓவர்களில் 124 ரன்களுக்கு சுருண்டு தோல்வியைத் தழுவியது. இந்த போட்டியில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றியது நடராஜனின் சிறந்த பந்துவீச்சாகும். இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இதவுரை 20 போட்டிகளில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.