Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையே ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 17) நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 27.2 ஓவர்களில் 116 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளையும், ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தொடர்ந்து களமிறங்கிய இந்தியா சாய் சுதர்ஷன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயரின் அரைசதங்கள் மூலம் 16.4 ஓவரில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விரிவாக படிக்க
ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
பாகிஸ்தான் vs ஆஸ்திரேலியா இடையே பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 360 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முன்னதாக, டிசம்பர் 14இல் தொடங்கிய இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 487 ரன்கள் குவித்தது. டேவிட் வார்னர் சதம் விளாசி 164 ரன்கள் குவித்தார். பாகிஸ்தான் அணியில் ஆமர் ஜமால் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தாலும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 271 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சில் ஞாயிற்றுக்கிழமை 233 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்தது. இதையடுத்து 450 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 89 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோற்றது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இஷான் கிஷான் விலகல்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருந்த விக்கெட் கீப்பர் பேட்டரான இஷான் கிஷான் தனிப்பட்ட காரணங்களால் விலகியுள்ளதாக பிசிசிஐ வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்டர் கேஎஸ் பாரத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி அந்த தொடர் முடிந்த பிறகு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதன் முதல் போட்டி டிசம்பர் 26-30 வரையிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 3-7 வரையிலும் நடைபெற உள்ளது. விரிவாக படிக்க
வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் மீண்டும் களமிறங்குகிறார் கேன் வில்லியம்சன்
வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான டி20 அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் செயல்படுவார் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. முன்னதாக, முழங்கால் காயம் காரணமாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 தொடரை அவர் தவறவிட்டார். அதன் பிறகு தொடர்ந்து காயத்தால் பலமுறை ஓய்வுக்கு சென்ற கேன் வில்லியம்சன் தற்போது டி20 உலகக்கோப்பைக்கான அணியை தயார் செய்வதை மனதில் வைத்து மீண்டும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். அணி : கேன் வில்லியம்சன், ஃபின் ஆலன், மார்க் சாப்மேன், கைல் ஜேமிசன், ஆடம் மில்னே, டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், பென் சியர்ஸ், டிம் சீஃபர்ட், இஷ் சோதி, டிம் சவுத்தி. விரிவாக படிக்க
தென்னாப்பிரிக்காவில் வரலாறு படைத்த அர்ஷ்தீப் சிங்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 116 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பாக பந்துவீசிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இதில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அவரது முதல் ஐந்து விக்கெட்டாகும். மேலும், இதன் மூலம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஒருநாள் போட்டியில் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனை படைத்துள்ளார். விரிவாக படிக்க