
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜூன் 28 வரை இடியுடன் மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (ஜூன் 26) முதல் வரும் ஜூன் 28ம் தேதி வரை இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமாக உள்ளதால், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், அருகிலுள்ள மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்துவரும் நிலையில், அதிகபட்சமாக கோயம்புத்தூர் மாவட்டத்தின் சின்னக்கல்லாரில் 9 செ.மீ., வால்பாறையில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், சின்கோனா, சோலையார், பார்சன்ஸ் பள்ளத்தாக்கு, அவலாஞ்சி மற்றும் மேல்பவானி பகுதிகளில் 6 முதல் 7 செ.மீ. வரை மழை பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்கள்
மற்ற மாநிலங்களின் மழை நிலவரம்
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு திசையில் வீசும் காற்றின் வேக மாற்றம் காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மின்னலுடன் கூடிய மழை இருக்கும். குறிப்பாக, கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், சில இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.