
தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திண்டுக்கல்லில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தில் தலா 7 செ.மீ. மழை பெய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தெற்கு ஒடிஷா மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மீது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதேபோல், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், பல இடங்களில் மழை பெய்யும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
மழை
இன்று கனமழைக்கான வாய்ப்பு
இன்று செங்கல்பட்டு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இன்றும், நாளையும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் சில இடங்களில் 40 கி.மீ. வேகத்திலான பலத்த காற்று வீசும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தமிழகத்தில் சில இடங்களில் இன்று மற்றும் நாளை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படலாம். இடியுடன் லேசான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.