தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதலில் மூத்த ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டார்
லெபனானில் ஈரான் ஆதரவு பெற்று இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேர், இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஷியா இஸ்லாமிய குழு தெரிவித்துள்ளது. மூத்த ஹிஸ்புல்லா பிரமுகரும், லெபனான் நாடாளுமன்ற உறுப்பினருமான முகமது ராத் என்பவரின் மகன் அப்பாஸ் ராத், உயிரிழந்தவர்களில் ஒருவர் என அந்த குழுவினர் கூறியுள்ளனர். இஸ்ரேல்-லெபனான் எல்லையில் வன்முறை வெடித்ததில் இருந்து தற்போது வரை, 85 ஹிஸ்புல்லா போராளிகள் கொல்லப்பட்டுள்ளதாக, ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது. புதன்கிழமை மாலை லெபனானில் உள்ள பல ஹெஸ்பொல்லா இலக்குகளைத் தாக்கியதாக இஸ்ரேலின் இராணுவம் கூறியது, இதில் "பயங்கரவாத உட்கட்டமைப்புகளும்" அடங்கும். அவை இஸ்ரேலுக்குள் ராக்கெட்டுகளை ஏவ மற்றும் இஸ்ரேலிய துருப்புக்கள் மீது, துப்பாக்கிச் சூடு நடத்த பயன்படுத்தப்பட்டவையாக கூறப்படுகிறது.
ஹூதி ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தி அமெரிக்க கப்பல்
ஏமனின் ஹூதி படைகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளை, செங்கடலில் ரோந்துப் பணியில் இருந்த அமெரிக்க போர்க்கப்பல் துட்டு வீழ்த்தியதாக அந்நாடு தெரிவித்துள்ளது. மேலும், "கப்பல் மற்றும் பணியாளர்களுக்கு எந்த சேதமோ அல்லது காயமோ ஏற்படவில்லை," என்று அமெரிக்கா கூறியுள்ளது. ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஈரான் தலைமையிலான பிராந்திய போராளிக் குழுக்களின் ஒரு பகுதியாக உள்ளனர், அவர்கள் தங்களை "ஆக்சிஸ் ஆப் ரெசிஸ்டன்ஸ்"(Axis of Resistance) என்று அழைக்கின்றனர். ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா போராளிகளும், இக்குழுவில் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.