Sports RoundUp: உலகக்கோப்பையில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா; ஐஎஸ்எல் லீக்கில் பஞ்சாபை வீழ்த்தியது சென்னையின் எஃப்சி; மேலும் பல முக்கிய செய்திகள்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 30) நடந்த ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. லக்னோ மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரோஹித் ஷர்மா 87 ரன்கள் எடுத்தார். 230 ரன்கள் எனும் எளிய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கினாலும், இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், ஜஸ்ப்ரீத் பும்ரா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்திய நிலையில், இங்கிலாந்து அணி 129 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியை சந்தித்தது.
பஞ்சாப் எஃப்சியை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய சென்னையின் எஃப்சி
ஞாயிற்றுக்கிழமை சென்னை நேரு ஸ்டேடியத்தில் பஞ்சாப் எஃப்சியை (பிஎஃப்சி) 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல் 2023-24) சீசனின் இரண்டாவது ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி (சிஎஃப்சி) வெற்றி பெற்றது. இரு அணிகளுமே ஆரம்பம் முதல் கோல் போட முயற்சி செய்த நிலையில், போட்டி கடுமையாக இருந்தது. எனினும், ரியான் எட்வர்ட்ஸ் சென்னையின் எஃப்சிக்காக 24வது நிமிடத்தில் கோல் போட்டியின் அணியின் கோல் கணக்கை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கானர் ஷீல்ட்ஸ் இரண்டு கோல்களையும், ரஃபேல் கிரிவெல்லாரோ மற்றும் வின்சி பாரெட்டோ தலா ஒரு கோலும் அடித்தனர். கடைசி வரை கோல் அடிக்க போராடிய பஞ்சாப் எஃப்சிக்கு கிருஷ்ணானந்தா கடைசி நேரத்தில் ஒரு ஆறுதல் கோல் அடித்தார்.
ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் வீரருக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதித்தது பிசிசிஐ
ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் வன்ஷாஜ் சர்மா, வெவ்வேறு பிறந்த தேதிகளுடன் பல பிறப்புச் சான்றிதழ்களை சமர்ப்பித்ததற்காக, பிசிசிஐ அவருக்கு இரண்டு ஆண்டு தடை விதித்துள்ளது. ஜம்முவின் பிஷ்னாவைச் சேர்ந்த சர்மா, பீகாரில் குடியேறி தற்போது அந்த மாநில சங்கத்தின் கீழ் விளையாடி வருகிறார். அக்டோபர் 27 ஆம் தேதி முதல் அனைத்து பிசிசிஐ போட்டிகளிலும் ஷர்மா பங்கேற்க இரண்டு ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜேகேசிஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டு தடையை முடித்த பிறகு, அவர் பிசிசிஐ நடத்தும் மூத்த ஆடவர் போட்டியில் மட்டுமே பங்கேற்க முடியும். மேலும் கிரிக்கெட் வாரியத்தின் எந்த வயதுப் பிரிவு போட்டிகளிலும் அவர் விளையாட அனுமதிக்கப்படமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் உலகக்கோப்பை 2023 : அதிக விக்கெட் எடுத்தவர்களில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார் பும்ரா
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஜஸ்ப்ரீத் பும்ரா அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஜஸ்ப்ரீத் பும்ரா 14 விக்கெட்டுகளை கைப்பற்றி இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில், முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜம்பா 16 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். மற்ற இந்திய வீரர்களில் குல்தீப் யாதவ் 10 விக்கெட்டுகளுடன் 10வது இடத்தில் உள்ள நிலையில், வெறும் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள முகமது ஷமி 9 விக்கெட்டுகளை வீழ்த்தி 14வது இடத்தில் உள்ளார். பேட்டிங்கைப் பொறுத்தவரை ரோஹித் ஷர்மா 398 ரன்களுடன் 4வது இடத்திலும், விராட் கோலி 354 ரன்களுடன் 6வது இடத்திலும் உள்ளனர்.
இங்கிலாந்து எதிரான 20 ஆண்டு சோக வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்திய கிரிக்கெட் அணி
ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒருநாள் உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியதன் மூலம், இந்தியா 20 ஆண்டு சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஒருநாள் உலகக்கோப்பையை பொறுத்தவரை இந்தியா கடைசியாக 2003இல் இங்கிலாந்தை தோற்கடித்து இருந்தது. அதன்பிறகு, 2011 உலகக்கோப்பை சீசனில் இரு அணிகளும் மோதிய போட்டி டையில் முடிந்த நிலையில், 2019இல் நடந்த மோதலில் இங்கிலாந்து இந்தியாவை வீழ்த்தி இருந்தது. இதற்கிடையே, இந்த வெற்றியின் மூலம் இந்தியா இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் உலகக்கோப்பையில் 4-4 என்ற கணக்கில் வெற்றி தோல்வியை சமன் செய்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான வெற்றியைத் தொடர்ந்து, இந்திய அணி நவம்பர் 2 ஆம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இலங்கையுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.