
தமிழகம், புதுச்சேரியில் ஆகஸ்ட் 2 வரை லேசான மழைக்கு வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான அளவிலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் அதிகபட்சமாக 26 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மேல்பவானியில் 19 செ.மீ., கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 17 செ.மீ., மற்றும் நீலகிரி நடுவட்டத்தில் 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுவதால், தமிழகத்தில் இன்றும் நாளையும் ஒருசில இடங்களில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை
சென்னையில் மேகமூட்டமாக இருக்கும்
ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 2 வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை தொடர்ச்சியாக பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஜூலை 31 வரை தென்தமிழக கடலோரங்கள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடைவிடாது 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.