LOADING...
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: கோவை, நீலகிரிக்கு 'ஆரஞ்ச் அலர்ட்'
கோவை, நீலகிரிக்கு 'ஆரஞ்ச் அலர்ட்'

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: கோவை, நீலகிரிக்கு 'ஆரஞ்ச் அலர்ட்'

எழுதியவர் Venkatalakshmi V
Jun 12, 2025
08:26 am

செய்தி முன்னோட்டம்

வளிமண்டல மேல்அடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு 'ஆரஞ்ச் அலர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது. மண்டல வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை படி, வடக்கு ஆந்திர கடலோரத்திற்கு அப்பால், மத்திய மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல மேல்அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் தாக்கத்தால், தமிழகத்தின் சில பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கனமழை

கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

இன்று கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். இதற்காக 'ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை, கோவை, திருநெல்வேலி, நீலகிரியில் மிக கனமழை பெய்யும் என்றும், தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரியில் கனமழை பெய்யும் சாத்தியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இது தவிர, ஜூன் 16 வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை நீடித்திருக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.