4 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட விவாகரத்தில், நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறையினர் சம்மன்
கடந்த சில நாட்களுக்கு முன்னர், சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு ரயிலில் 4 கோடி ரூபாய் கொண்டு செல்லப்பட்ட விவகாரத்தில், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று நபர்களும் இது நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் தான் என்றும், வேட்பாளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது என வாக்குமூலம் தந்ததாக செய்திகள் வெளியானது. எனினும் இதற்கும் தனக்கும் சம்மந்தமில்லை என நயினார் நாகேந்திரன் மறுத்தார். இந்த நிலையில் தான், பிடிப்பட்ட நபர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரனுக்கு இன்று தாம்பரம் காவல் நிலையத்தில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வருகின்ற 21ஆம் தேதிக்குள் தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.