Sports Round Up : ரோஹன் போபண்ணா அரையிறுதிக்கு முன்னேற்றம்; தமிழக ஹாக்கி அணி வெற்றி; மேலும் பல முக்கிய செய்திகள்
இத்தாலியின் டுரினில் நடந்து வரும் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் ரோஹன் போபண்ணா மற்றும் ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. முன்னதாக, வெள்ளிக்கிழமை (நவம்பர் 17) நடைபெற்ற காலிறுதி போட்டியில் நெதர்லாந்தின் வெஸ்லி கூல்ஹாஃப் மற்றும் பிரிட்டனின் நீல் ஸ்குப்ஸ்கி ஜோடியை எதிர்கொண்ட போபண்ணா ஜோடி 84 நிமிடங்கள் நீடித்த போட்டியில் 6-4, 7-6(5) என்ற நேர் செட்களில் வீழ்த்தி வெற்றி பெற்றனர். இந்த ஆண்டு தொடக்கம் முதல் இரட்டையர் பிரிவில் இணைந்து விளையாடும் போபண்ணா மற்றும் எப்டன் ஜோடி ஏற்கனவே தோகா மற்றும் இந்தியன் வெல்ஸ் தொடர்களில் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. விரிவாக படிக்க
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய தேர்வுக்குழு தலைவர் நியமனம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வஹாப் ரியாஸை, அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. முன்னதாக, தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்த முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் சமீபத்தில் ராஜினாமா செய்தார். மேலும், ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானின் மோசமான செயல்பாட்டை தொடர்ந்து அணியை முழுமையாக மறுகட்டமைப்பு செய்து வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், அதன் ஒரு பகுதியாக புதிய தேர்வுக்குழு தலைவரை தற்போது நியமித்துள்ளது. 38 வயதான ரியாஸ், கடந்த ஆகஸ்ட் மாதம்தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. விரிவாக படிக்க
ஆசிய மாஸ்டர்ஸ் தடகள போட்டியில் 4 தங்க பதக்கங்களை வென்ற 86 வயது தமிழக வீரர்
பிலிப்பைன்ஸில் சமீபத்தில் நடந்த 22வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்ற 86 வயதான கே.சுப்பிரமணியம் 4 தங்கப்பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த சுப்பிரமணியம் சிறுவயது முதலே விளையாட்டில் ஆர்வம் இருந்தாலும், சாதிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், தனது 80களில் இருக்கும் அவர் தீவிரமாக பயிற்சி செய்து 85 வயதுக்கு மேற்பட்ட மூத்தோர் பிரிவில் இந்தியாவுக்காக நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகளில் தங்க பதக்கங்களை வென்றுள்ளார். பதக்கத்துடன் இந்தியா திரும்பிய அவரை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார். விரிவாக படிக்க
வீராங்கனைக்கு உதட்டு முத்தம்; ஸ்பெயின் கால்பந்து கூட்டமைப்பின் தலைவருக்கு 3 ஆண்டுகள் தடை
மகளிர் கால்பந்து உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் வீராங்கனையின் அனுமதியின்றி உதட்டில் முத்தமிட்ட ஸ்பெயின் கால்பந்து கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் லூயிஸ் ரூபியால்ஸ் அந்நாட்டு கலந்து கூட்டமைப்பில் 3 ஆண்டுகள் பணியாற்ற தகுதியற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 20 அன்று ஆஸ்திரேலியாவில் நடந்த இந்த சம்பவம் உலக அளவில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், லூயிஸ் ரூபியால்ஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டு அவர் பதவி விலகினார். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரித்த ஸ்பெயினில் விளையாட்டுகளை மேற்பார்வையிடும் சட்டக் குழு வெள்ளிக்கிழமை தீர்ப்பை வெளியிட்டுள்ளது. அந்த தீர்ப்பில் ரூபியால்ஸ் மூன்று வருடங்களுக்கு ஸ்பெயின் கூட்டமைப்பில் பொறுப்பு வகிக்க தடை விதித்துள்ளது. முன்னதாக, ஃபிஃபாவும் இதே உத்தரவை வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் அசாமை பந்தாடிய தமிழக அணி
13வது சீனியர் தேசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க நாளான வெள்ளிக்கிழமை தமிழ்நாடு அசாமை 15-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாடு சார்பாக பி.சதீஷ், எம்.தனுஷ், எம்.ப்ருத்வி, சுந்தரபாண்டி, ஜே.கவின் கிஷோர், எஸ்.கார்த்தி, ஜோஷ்வா பெனடிக்ட் வெஸ்லி, சி.தினேஷ் குமார், கே.செல்வராஜ், பி.பி.சோமன்னா ஆகியோர் கோல் மழை பொழிந்தனர். மறுமுனையில் அசாம் சார்பில் ரூப்சந்த் போரோ ஒரே ஒரு கோல் மட்டுமே அடிக்க, அந்த அணி தமிழகத்திடம் தோற்றது. இதற்கிடையே முதல் நாளில் நடந்த மற்ற இரண்டு போட்டிகளில் மணிப்பூர் மத்திய பிரதேசத்தையும், மகாராஷ்டிரா உத்தரகாண்டையும் வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் பஞ்சாபுக்கு எதிராக திரிபுரா பாதியிலேயே வெளியேறியதால், பஞ்சாப் வென்றதாக அறிவிக்கப்பட்டது.