Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
புரோ கபடி லீக் 10வது சீசனின் தொடக்க ஆட்டத்தில் சனிக்கிழமை (டிசம்பர் 2) தெலுங்கு டைட்டன்ஸை எதிர்கொண்ட குஜராத் ஜெயன்ட்ஸ் த்ரில் வெற்றி பெற்று போட்டியை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியின் கேப்டன் பவன் செஹ்ராவத் சூப்பர் 10 ஐப் பெற்றாலும், ஆட்டத்தின் முக்கியமான தருணங்களில் அந்த அணி மோசமான தவறுகளை செய்தது. போட்டியின் இரண்டாவது பாதியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய சோனு 11 புள்ளிகளைப் பெற்று, குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை முன்னிலை பெறச் செய்த நிலையில், இறுதியில் குஜராத் 38-32 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது.
புரோ கபடி லீக் : உபி யோதாஸ் அணியை வீழ்த்தி யு மும்பா த்ரில் வெற்றி
புரோ கபடி லீக் 10வது சீசனின் முதல் நாளில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் சனிக்கிழமை (டிசம்பர் 2) உபி யோதாஸ் அணியை எதிர்கொண்ட யு மும்பா போராடி வென்றது. 10வது சீசனில் யு மும்பா தனது முதல் போட்டியில் த்ரில் வெற்றி பெற்ற நிலையில், இந்த போட்டியில் அறிமுகமாகி வீரராக களமிறங்கிய அமீர்முகமது ஜாபர்தானேஷ் யு மும்பா அணிக்காக சிறப்பாக செயல்பட்டார். மேலும், அந்த அணியின் கேப்டன் சுரிந்தர் சிங்கின் ஆதரவோடு, சில தரமான தடுப்பாட்டங்களுடன் டிஃபெண்டெர் ரிங்கு போட்டி முழுவதும் ஆதிக்கம் செலுத்தி, அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களித்தார்.
ஐஎஸ்எல் கோப்பை 2023-24 : ஹைதராபாத் எஃப்சியை வீழ்த்தி வரலாறு படைத்த மோஹுன் பாகன் எஸ்ஜி
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கோப்பை 2023-24 தொடரில் இதுவரை தோல்வியையே கண்டிராத மோஹுன் பாகன் எஸ்ஜி கால்பந்து அணி, சனிக்கிழமை (டிசம்பர் 2) அன்று கலிங்கா ஸ்டேடியத்தில் ஹைதராபாத் எஃப்சி அணிக்கு எதிராக வெற்றி பெற்றது. ஹைதராபாத் எஃப்சி வலுவாகத் தொடங்கியது. ஆனால் அதன் பின்னர் ஆட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த மோஹுன் பாகன் போட்டி முழுவதும் ஆதிக்கம் செலுத்தினர். இதன் மூலம், இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் மோஹுன் பாகன் ஹைதராபாத் எஃப்சியை வீழ்த்தியது. மேலும், இந்த வெற்றியின் மூலம் இந்த சீசனில் தொடர்ச்சியாக ஐந்து வெற்றிகளை பெற்று வேறு எந்த அணியும் செய்யாத சாதனை படைத்துள்ளது.
தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் : தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன்
டெல்லியில் உள்ள டாக்டர் கர்னி சிங் துப்பாக்கி சுடும் மைதானத்தில் நடைபெற்ற 66வது தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியின் (என்எஸ்சிசி) இறுதி நாளில் ஒலிம்பிக் வீராங்கனை இளவேனில் வாலறிவன் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்றார். எட்டு பேர் இறுதிப்போட்டியில் போட்டியிட்ட நிலையில், இரண்டாவது இடத்தை பிடித்த ஹரியானாவின் ரமிதா ஜிண்டாலை விட 0.9 புள்ளிகள் கூடுதலாக பெற்று தங்கம் வென்றார். ரமிதாவின் சக ஹரியானா வீராங்கனை நான்சி மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இதற்கிடையே ஜூனியர் ஏர் ரைபிள் பிரிவில் ரமிதா தங்கப் பதக்கத்தையும், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கவுதமி பானோட் இளையோர் தங்கப் பதக்கத்தையும் வென்றனர். விரிவாக படிக்க
நியூசிலாந்துக்கு எதிராக முதல் டெஸ்டில் வங்கதேச கிரிக்கெட் அணி வெற்றி
சில்ஹெட்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக வங்கதேச கிரிக்கெட் அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் முதல் இன்னிங்சில் 310 ரன்கள் குவித்த நிலையில், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 317 ரன்கள் குவித்து 7 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்சில் வங்கதேசம் 338 ரன்கள் குவித்ததை அடுத்து 332 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. ஆனால், வங்கதேசத்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 181 ரன்களுக்கு ஆட்டமிழந்து 150 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. நியூசிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் பெறும் இரண்டாவது வெற்றி இதுவாகும். விரிவாக படிக்க