Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
விஜய் ஹசாரே கோப்பை 2023 தொடரில் சனிக்கிழமை (டிசம்பர் 16) நடைபெற்ற இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று ஹரியானா முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது. முன்னதாக, ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹரியானா முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஜித் தோமர் சதமடித்து 106 ரன்களும், குணால் சிங் ரத்தோர் 79 ரன்கள் எடுத்தாலும், விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் விழுந்ததால் 48 ஓவர்களில் 257 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது.
இந்தியா vs இங்கிலாந்து மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாறு படைத்தது இந்திய அணி
இந்தியா vs இங்கிலாந்து இடையே நடைபெற்ற மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 347 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது. நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 428 ரன்கள் எடுத்த நிலையில், இங்கிலாந்து 136 ரன்களுக்கு சுருண்டது. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 186 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்த நிலையில் டிக்ளர் செய்ய, இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 131 ரன்களுக்கு சுருண்டு தோல்வியைத் தழுவியது. இதற்கிடையே, இந்த வெற்றியின் மூலம் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.
5 நாடுகள் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி பெல்ஜியத்திடம் தோல்வி
ஸ்பெயினின் வலென்சியாவில் சனிக்கிழமை நடைபெற்ற 5 நாடுகள் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் ஆடவர் இந்திய ஹாக்கி அணி 2-7 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்துக்கு எதிராக தோல்வியடைந்தது. போட்டியின் முதல் காலிறுதியில் பெல்ஜியம் மூன்று கோல்களை அடித்து முன்னிலை பெற்றது. இரண்டாவது காலிறுதியின் தொடக்கத்தில் பெல்ஜியம் மேலும் ஒரு கோல் அடித்தது. இதைத் தொடர்ந்து இந்தியாவுக்காக அபிஷேக் ஒரு கோல் அடித்து இந்தியாவின் கோல் கணக்கை தொடங்கினாலும், பெல்ஜியம் மற்றொரு கோல் அடித்தது. இரண்டாவது காலிறுதியின் முடிவில், ஜுக்ராஜ் சிங் இந்தியாவுக்காக இரண்டாவது கோல் அடித்த நிலையில், மூன்றாவது காலிறுதியில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. தொடர்ந்து நான்காவது காலிறுதியில் பெல்ஜியம் மேலும் இரண்டு கோல் அடிக்க, இறுதியில் இந்தியா தோற்றது.
இந்தியா vs தென்னாப்பிரிக்கா : முகமது ஷமி நீக்கம், தீபக் சாஹர் விலகல்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இடம் பெற மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. சமீபத்திய ஒருநாள் உலகக்கோப்பையில் தனது சிறப்பான ஆட்டத்திற்கு பிறகு கணுக்கால் தசைப்பிடிப்பு காரணமாக மருத்துவ சிகிச்சையில் இருந்து வரும் முகமது ஷமி முழுமையாக குணமடையும் முன்பே அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவக் குழு அவர் இன்னும் முழுமையாக குணமடையாததால் போட்டிகளில் பங்கேற்க அனுமதி வழங்காததால் அவரை அணியிலிருந்து பிசிசிஐ விலக்கியுள்ளது . இதேபோல் குடும்ப உறுப்பினர் உடல்நிலை மோசமடைந்ததன் காரணமாக டி20 போட்டிகளில் விளையாடாத தீபக் சாஹர் ஒருநாள் தொடரிலும் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரிவாக படிக்க
புரோ கபடி லீக் : புள்ளிப்பட்டியலில் பத்தாவது இடத்தில் பின்தங்கியுள்ள தமிழ் தலைவாஸ்
புரோ கபடி லீக் பத்தாவது சீசன் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், டிசம்பர் 16 நிலவரப்படி பெங்கால் வாரியர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. குஜராத் ஜெயன்ட்ஸ், புனேரி பல்தான், ஹரியானா ஸ்டீலர்ஸ் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. தமிழ் தலைவாஸ் அணி பத்தாவது இடத்தில் பின்தங்கி உள்ளது. புரோ கபடி லீக்கின் விதிகளின்படி, முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே பிளேஆஃப்களுக்கு தகுதி பெறும். லீக் சுற்று ஆட்டங்களில் ஒவ்வொரு அணியும் போட்டியில் வெற்றி வெற்றி பெற்றால் ஐந்து புள்ளிகளைப் பெறும். தோல்வி மார்ஜின் 7 அல்லது அதற்கும் குறைவாக இருந்தால் தோல்வியடைந்த அணிக்கும் ஒரு புள்ளி கிடைக்கும். டை ஆகும்போது இரு அணிகளும் தலா மூன்று புள்ளிகளைப் பெறுவது குறிப்பிடத்தக்கது.