Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் திங்கட்கிழமை (அக்.30) நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கான் கிரிக்கெட் அணி இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. முன்னதாக, போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பாதும் நிசங்க 46 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் ஃபசல்ஹாக் ஃபரூக்கி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 45.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்த நிலையில், இலக்கை எட்டி வெற்றி பெற்றது. அந்த அணியில் ரஹ்மத் ஷா, ஹசமதுல்லா ஷாஹிதி மற்றும் அசமதுல்லா ஒமர்சாய் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.
எட்டாவது முறையாக பலோன் டி'ஓர் விருதை வென்றார் லியோனல் மெஸ்ஸி
பிரான்ஸ் கால்பந்து இதழால் 1956 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆண்களுக்கு பலோன் டி'ஓர் விருதை எட்டாவது முறையாக அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸி வென்றுள்ளார். லியோனல் மெஸ்ஸி இதுவரை எட்டு முறை பலோன் டி'ஓர் விருதை வென்றுள்ளார். அவரைத் தொடர்ந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ ஐந்து முறை வென்றுள்ளார். திங்கட்கிழமை பாரிஸில் உள்ள தியேட்டர் டு சாட்லெட்டில் தனது எட்டாவது விருதை பெற்று கோப்பையுடன் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. முன்னதாக, மெஸ்ஸி தனது முதல் பலோன் டி'ஓர் விருதை 14 ஆண்டுகளுக்கு முன்பு 2009இல் வென்றார். இதன் மூலம் பலோன் டி'ஓர் விருதை வென்ற முதல் அர்ஜென்டினா வீரர் என்ற பெருமையை அவர் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் சீனாவை வீழ்த்தியது இந்திய ஹாக்கி அணி
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் திங்கட்கிழமை நடைபெற்ற மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 இன் மூன்றாவது ஆட்டத்தில் இந்திய ஹாக்கி அணி 2-1 என்ற கோல் கணக்கில் சீனாவை தோற்கடித்தது. போட்டியின் முதல் பாதியில் தீபிகா (15') மற்றும் சலிமா டெட் (26') ஆகியோர் இந்தியாவுக்காக கோல் அடித்து முன்னிலை பெற்றுக் கொடுத்தனர். மேலும், இரண்டாவது பாதியில் இந்தியா கோல் எதுவும் அடிக்காத நிலையில், சீனாவின் ஜோங் ஜியாகி (41') கடுமையாக போராடி அந்த அணிக்கு ஒரு கோலை பெற்றுக் கொடுத்தார். இதன் மூலம், இந்தியா தற்போதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துள்ளது. இதன்மூலம் அரையிறுதிக்கான வாய்ப்பையும் கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.
பிரபல இலங்கை கிரிக்கெட் ரசிகர் பேர்சி அபேசேகர காலமானார்
இலங்கை நாட்டு கொடியை ஏந்திக் கொண்டு இலங்கை கிரிக்கெட் அணியின் போட்டிகளில் பார்வையாளராக பங்கேற்று பிரபலமான அந்நாட்டு ரசிகர் பேர்சி அபேசேகர, நீண்டகால நோயினால் அவதிப்பட்டு வந்த நிலையில், திங்களன்று காலமானார். 87 வயதான அபேசேகர, ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களால் அங்கிள் பெர்சி என்று அன்புடன் அழைக்கப்பட்டார். அவர் தனது நாடு உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் எங்கெல்லாம் விளையாடுகிறதோ அங்கெல்லாம் தொடர்ந்து நேரில் சென்று பார்த்த வண்ணம் இருந்தார். வண்ணமயமான ஆடை அணிவதற்காக அறியப்பட்ட அபேசேகர, 1979 உலகக்கோப்பையில் இருந்து இலங்கை அணியை உற்சாகப்படுத்தும் இந்த பயணத்தை தொடங்கி செய்து வந்தார். உடல்நலக்குறைவால் தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் உலகக்கோப்பையில் அவர் பங்கேற்காமல் இருந்த நிலையில், தற்போது காலமாகியுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து இன்சமாம் உல் ஹக் ராஜினாமா
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் பொறுப்பில் இருந்து இன்சமாம் உல் ஹக் திங்களன்று ராஜினாமா செய்தார். மார்க்கெட்டிங் மற்றும் வர்த்தக விளம்பரங்களுக்காக பல பாகிஸ்தான் வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனத்தில் ஆதாயம் பெறும் பதவி வகித்ததாக இன்சமாம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், பதவியை ராஜினாமா செய்த கையோடு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) எந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக இன்சமாம் தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தானில் உள்ள ஒரு உள்ளூர் தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டியளித்த இன்சமாம், இந்தக் குற்றச்சாட்டுக்களால் தான் மனம் உடைந்துள்ளேன் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.