ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி தவிக்கும் பயணிகள் இன்று மீட்கப்படுவார்கள் - ரயில்வே நிர்வாகம்
செய்தி முன்னோட்டம்
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடற்பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்து பெரும் சேதங்களை ஏற்படுத்தியதோடு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் செந்தூர் விரைவு ரயிலில் சிக்கிய 500 பயணிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் 3வது நாளாக இன்று(டிச.,19)வரை சிக்கி தவிக்கிறார்கள்.
இவர்களுக்கு உணவினை ஹெலிகாப்டர் கொண்டு வழங்க முயற்சிக்கப்பட்டது.
ஆனால் ரயில் நிலையத்தை ஹெலிகாப்டரால் அணுக முடியவில்லை என்று கூறப்படுகிறது.
கனமழை
பயணிகளை மீட்பது குறித்து தெற்கு ரயில்வே அறிக்கை
இந்நிலையில் ரயிலில் சிக்கியவர்களை மீட்பது குறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்ட அலுவலகம் செய்திக்குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அதில், தாழையூத்து-கங்கைகொண்டான் தடத்தில் 7.71கி.மீ.,தூரத்திற்கு ரயில்பாதை பாதிக்கப்பட்டு தண்டவாளம் அந்தரத்தில் தொங்குகிறது.
நயினார் குளம் நிரம்பியதால் திருநெல்வேலி ரயில் நிலையம் நீரில் மூழ்கியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல் தூத்துக்குடி செய்துங்கநல்லூர்-ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையங்களில் 12.16கி.மீ.,தொலைவிற்கு ரயில் தண்டவாளத்திலுள்ள சரளை கற்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
வெள்ளம் வடிந்தவுடன் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ரயில்வே பொறியியல் பிரிவினை சேர்ந்த ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம்
நிலைமை சீரடைந்ததும் மீட்பு பணி தீவிரப்படுத்தப்படும்
மேலும் நிலைமை சீரடைந்ததும் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி தவிக்கும் அனைவரும் இன்று மீட்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது.
கடந்த ஞாயிறு இரவு 8.25 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட செந்தூர் விரைவு ரயில் 33 கி.மீ.,பயணத்திற்கு பிறகு பாதுகாப்பு காரணத்திற்காக இரவு 9.19க்கு ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இதில் 800 பயணிகள் சிக்கிய நிலையில் திங்கட்கிழமை அதிகாலை தமிழக அரசு மீட்பு பணியாளர்கள் இவர்களுள் 300 பேரை மீட்டு 2 வேன்கள் மற்றும் 4 பேருந்துகள் மூலம் அழைத்து செல்லப்பட்டு ஓர் பள்ளியில் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டு பாதுகாப்பாக தங்க வைத்துள்ளனர்.
சிக்கல்
சாலையில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக மீட்பு பணிகள் பாதிப்பு
அதன் பின்னர், சாலையில் உடைப்பு ஏற்பட்டதால் மீட்பு பணியினை தொடர முடியவில்லை.
தொடர் மழை காரணமாக பயணிகளை மீட்பு குழுவினரால் மீட்க முடியாத நிலை ஏற்பட்டது.
எனினும், ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இரவில் மீட்பு பணியில் ஈடுபடுவதில் சிரமம் இருப்பதால் இன்று பயணிகளை மீட்க தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்று தெரிகிறது.
அவ்வாறு மீட்கப்படும் பயணிகள் வாகனங்கள் கொண்டு அழைத்து வரப்பட்டு சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று ரயில்வே நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தின் தற்போதைய நிலை
#JUSTIN வெள்ளத்தால் சூழப்பட்ட ஸ்ரீவைகுண்டம்
— News18 Tamil Nadu (@News18TamilNadu) December 18, 2023
ரயில் நிலையம் pic.twitter.com/5lIpCTpzCC