
தமிழகம், புதுச்சேரியில் மே 27 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் பல பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மே 27 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று காலை முடிவடைந்த 24 மணி நேரத்தில், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் அதிகபட்சமாக 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதே மாவட்டத்தின் அரக்கோணம் பகுதியில் 12 செ.மீ. மழை விழுந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்ப்பென்னாத்தூர் மற்றும் வெம்பாக்கம், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாலாறு அணைக்கட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி ஆகிய இடங்களில் தலா 10 செ.மீ. மழை பெய்துள்ளது.
மழை
மே 27 வரை மழை நீடிக்கும்
மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, ஆந்திரா கரை வரை நீண்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சிக்கு காரணமாக, தமிழகத்தின் சில பகுதிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும்.
இந்த நிலை மே-27 வரை தொடரும் எனக் கூறப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் மணிக்கு 45 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையே 55 கி.மீ. வரை சூறாவளிக் காற்றுகள் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.