LOADING...
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு
தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Jul 24, 2025
01:39 pm

செய்தி முன்னோட்டம்

வங்கக்கடலின் மேற்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில், குறிப்பாக நாளை காலை 9 மணிக்குள், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு, வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய மேற்குவங்க கடற்கரை பகுதிகளை நோக்கி செல்லும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் தாக்கமாக, தமிழகத்தில் மழை நிலைமை தொடர்ந்து நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை 

தமிழகத்தில் வானிலை நிலவரம் 

குறிப்பாக, மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்னிந்தியாவின் மேல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இந்த சுழற்சி காரணமாக, இன்று முதல் ஜூலை 29-ம் தேதி வரை, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகின்றது. சென்னையிலும், பல்வேறு பகுதிகளில் மேகமூட்டத்துடன் லேசான சாரல் மழை மற்றும் அவ்வப்போது கனமழை பதிவாகி வருகிறது. வானிலைத் தகவல்களின் அடிப்படையில், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தேவையான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.