
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 29ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றிருந்து ஜூன் 29ஆம் தேதி வரை சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்மேற்கு பருவமழை தற்போது தமிழகத்தில் தீவிரமாக காணப்படுகிறது. இதன் விளைவாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை தொடர் பதிவாகி வருகிறது. கடந்த 24 மணி நேர நிலவரப்படி, கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 11 செ.மீ., சோலையாரில் 10 செ.மீ., சின்கோனாவில் 9 செ.மீ., வால்பாறையில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாகவும் மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் தலா 7 செ.மீ., கோவை ஆழியார், அவலாஞ்சி மற்றும் பார்வூட்டில் தலா 5 செ.மீ. மழை பெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை வாய்ப்பு
இன்னும் சில நாட்களுக்கு தமிழத்தில் மழைக்கு வாய்ப்பு
மேலும், சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, விழுப்புரம், சிவகங்கை, திருவள்ளூர், தஞ்சாவூர், திருப்பூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு, ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் மழை பதிவாகியுள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், இன்று மற்றும் நாளை தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யும் என்றும், ஜூன் 26 முதல் 29 வரை சில இடங்களில் தொடர்ந்து மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.