Page Loader
காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாவதில் தாமதம்; தமிழகத்தில் நவம்பர் 15 வரை கனமழை
தமிழகத்தில் நவம்பர் 15 வரை கனமழை

காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாவதில் தாமதம்; தமிழகத்தில் நவம்பர் 15 வரை கனமழை

எழுதியவர் Venkatalakshmi V
Nov 11, 2024
10:30 am

செய்தி முன்னோட்டம்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. நாளை உருவாகவிருந்த இந்த தாழ்வுநிலை தற்போது மேலும் தாமதம் அடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் 15-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின்மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, அதே இடத்தில நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பரவலாக 15-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது'.

மழை

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்

இன்று நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும், நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 14, 15-ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post