2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது- பிரதமர் மோடி
2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் தெரிவித்தார். மும்பையில் உள்ள நீதா அம்பானி கலாச்சார மையத்தில் நடைபெற்ற 141 ஆவது ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாக், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினர் நீதா அம்பானி, மத்திய அமைச்சர்கள், விளையாட்டு பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பேசிய பிரதமர், 2036 ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதில் இந்தியா ஆர்வமாக உள்ளது எனவும், இந்தியாவில் ஒலிம்பிக்கை நடத்துவது 140 கோடி இந்தியர்களின் கனவாக உள்ளது என தெரிவித்தார்.
ஆசிய நாடுகளில் நான்கு முறை மட்டுமே நடைபெற்றுள்ள ஒலிம்பிக் போட்டிகள்
இந்தியா, காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள், ஆசிய விளையாட்டு போட்டிகள், கிரிக்கெட் உலக கோப்பை, செஸ் ஒலிம்பியாட் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை நடத்தி இருந்தாலும் ஒலிம்பிக் போட்டியை நடத்துவது கனவாகவே உள்ளது. ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட ஒலிம்பிக் போட்டிகளின் வரலாற்றில், மூன்றே ஆசிய நாடுகள் மட்டுமே ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியுள்ளனர். ஜப்பான் இருமுறையும், தென்கொரியா மற்றும் சீனா தல ஒரு முறையும் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியுள்ளன. 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியா நடத்தும் பட்சத்தில், ஒலிம்பிக்கை நடத்திய நான்காவது ஆசிய நாடு என்ற பெருமையை பெறும். மெக்சிகோ, துருக்கி, போலந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான போட்டியில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.