சென்னையில் தொடங்கியது 'தலைவர்170' திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு
ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர்170 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியது. பிரசாத் லேபில் அமைக்கப்பட்டுள்ள படப்பிடிப்பு தளத்தில், ரஜினிகாந்த் தொடர்பான சில முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. ஒரு வாரத்திற்கு இங்கு படப்பிடிப்பு நடைபெறும் நிலையில், பின்னர் படப்பிடிப்பு வெளியில் நடைபெறும் என கூறப்படுகிறது. மேலும் படப்பிடிப்பு விரைவாக நடந்து வருவதால், எதிர்பார்க்கப்பட்ட காலத்திற்கு முன்னதாகவே படப்பிடிப்பு முடிவடையும் என்பதால், படம் அடுத்த வருட கோடை காலத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.
தலைவர்170 திரைப்படம் குறித்து இதுவரை அறிந்த தகவல்கள்
தலைவர்170 திரைப்படத்திற்காக 33 ஆண்டுகளுக்குப் பிறகு, ரஜினிகாந்த்தும், பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன் இணைகின்றனர். ரஜினிகாந்த்-அமிதாப்பச்சன் தொடர்பான காட்சிகள், கடந்த மாதம் மும்பையில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது படமாக்கப்பட்டது. இவர்கள் தவிர, பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கும் நிலையில், அனிருத் இசையமைக்கிறார். படத்தின் முந்தைய கட்ட படப்பிடிப்புகள் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள், கேரளா மற்றும் மும்பையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. தலைவர்170 திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு பின், ஏப்ரல் மாதத்தில் லோகேஷ் கனகராஜ்- ரஜினிகாந்த் இணையும் தலைவர்171 படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.