காசாவில் குழந்தைகள் கொல்லப்படுவதாக குற்றம் சாட்டிய ட்ரூடோ, பதிலளித்த நெதன்யாகு
காசாவில் பெண்கள், குழந்தைகள் கொல்லப்படுவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதிலளித்துள்ளார். அக்டோபர் 7ஆம் தேதி நடந்த தாக்குதலை சுட்டிக்காட்டி ட்விட்டரில் பதிலளித்த பிரதமர்நெதன்யாகு, "இஸ்ரேல் வேண்டுமென்றே பொதுமக்களை குறி வைக்கவில்லை," "ஆனால் ஹோலோகாஸ்டுக்குப் பிறகு யூதர்கள் மீது நிகழ்த்தப்பட்ட மிக மோசமான கொடூரங்களில், பொதுமக்களின் தலையை துண்டித்து, எரித்து, படுகொலை செய்தது ஹமாஸ்" "பொதுமக்களை பாதிப்பில் இருந்து காப்பாற்ற இஸ்ரேல் அனைத்தையும் செய்து வரும் அதே வேளையில், ஹமாஸ் அவர்களுக்கு தீங்கை ஏற்படுத்த அனைத்தையும் செய்து வருகிறது" "காசா மக்கள் வெளியேற இஸ்ரேல் பாதுகாப்பான வழித்தடங்களை வழங்கியுள்ள நிலையில், ஹமாஸ் அவர்கள் வெளியேறுவதை துப்பாக்கி முனையில் தடுக்கிறது" என கூறியுள்ளார்.
போர் குற்றங்களுக்கு ஹமாஸ் பொறுப்பேற்க வேண்டும்- நெதன்யாகு
மேலும் அவர், மக்களை கொன்று, மக்கள் பின்னால் மறைந்திருக்கும் ஹமாஸ் அமைப்பு, இரட்டை போர் குற்றங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். "ஹமாசின் காட்டுமிராண்டித்தனத்தை முறியடிக்க நாகரீக சக்திகள் இஸ்ரேலை ஆதரிக்க வேண்டும்" எனவும் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். முன்னதாக, ஆக்கிரமிக்கப்பட்ட காசா பகுதியில் பல லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து உள்ளதையும், எரிபொருள் இல்லாமல் மருத்துவமனைகள் ஸ்தம்பித்துள்ளதையும் சுட்டிக்காட்டி கனடா அதிபர் இந்த கருத்துக்களை தெரிவித்திருந்தார். ஹமாஸ் தாக்குதலுக்கு பதில் தாக்குதலை இஸ்ரேல் தொடங்கிய நிலையில், தற்போது வரை 11,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் 4,500 குழந்தைகளும், 3,000க்கும் மேற்பட்ட பெண்களும் அடங்குவர்.
இஸ்ரேல் குறித்து கனடா பிரதமர் என்ன பேசினார்?
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பிரிட்டிஷ் கொலம்பியாவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், "இஸ்ரேல் அரசாங்கம் அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்". "உலகம் தொலைக்காட்சிகளிலும் சமூக ஊடகங்களிலும் மருத்துவர்கள், உயிர் பிழைத்தவர்கள், பெற்றோரை இழந்த குழந்தைகளின் சாட்சியங்களை பார்க்கிறது" என்ற அவர். இந்த உலகம் பெண்கள், குழந்தைகள் கொல்லப்படுவதை பார்ப்பதாகவும், அது நிறுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். போர் தொடங்கியதற்கு பின்னர், இஸ்ரேலுக்கு எதிரான கனடா அதிபரின் காட்டமான கருத்து இதுவாகும். மேலும் அவர், ஹமாஸ் பணயக் கைதிகளை மனிதர் கேடயங்களாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும், 200க்கும் மேற்பட்ட பணயக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனவும் கூறியிருந்தார்.