Page Loader
பயங்கரவாதிகள் எல்லாம் தியாகிகளாம்; மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய பாகிஸ்தான் ராணுவ தளபதியின் பேச்சு
பாகிஸ்தான் ராணுவ தளபதியின் புதிய சர்ச்சை பேச்சு

பயங்கரவாதிகள் எல்லாம் தியாகிகளாம்; மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய பாகிஸ்தான் ராணுவ தளபதியின் பேச்சு

எழுதியவர் Sekar Chinnappan
Jun 29, 2025
02:28 pm

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், காஷ்மீர் குறித்து ஆத்திரமூட்டும் கருத்துகளுடன் மீண்டும் சர்ச்சையைத் தூண்டியுள்ளார். இந்தியாவிற்குள் தங்கள் நாட்டிலிருந்து தயார் செய்து அனுப்பக்கூடிய பயங்கரவாதிகளை வெளிப்படையாக ஆதரித்து, கொல்லப்பட்ட பயங்கரவாதிகளை தியாகிகள் என்று குறிப்பிட்டுள்ளார். கராச்சியில் உள்ள பாகிஸ்தான் கடற்படை அகாடமியில் பேசிய அசீம் முனீர், ஜம்மு காஷ்மீரில் நடந்து வரும் பயங்கரவாதத்தை சட்டபூர்வமான போராட்டம் என்று விவரித்தார். மேலும், அத்தகைய நடவடிக்கைகளுக்கு அரசியல், தார்மீக மற்றும் ராஜதந்திர ஆதரவை வழங்குவதில் பாகிஸ்தான் தொடர்ந்து உறுதியாக இருப்பதாக மீண்டும் வலியுறுத்தினார். பாகிஸ்தான் ஒரு நிகர பிராந்திய சமநிலைப்படுத்தி என்று கூறி, இந்தியா இரண்டு முறை தூண்டுதல் இல்லாமல் பாகிஸ்தானைத் தாக்கியதாக அசீம் முனீர் குற்றம் சாட்டினார்.

பதிலடி

பதிலடி கொடுப்போம் என எச்சரிக்கை

எந்தவொரு எதிர்கால நடவடிக்கைக்கும் தீர்க்கமான பதிலடி கொடுப்பதாக இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்தார். கடுமையான ஆத்திரமூட்டல்கள் இருந்தபோதிலும் பாகிஸ்தான் நிதானத்துடன் செயல்பட்டதாகவும், பிராந்தியத்தில் அமைதியை வலுப்படுத்த பொறுப்புடன் செயல்படுவதாகவும் அவர் வலியுறுத்தினார். பாகிஸ்தான் நீண்டகாலமாக பயங்கரவாத ஆதரவு நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பது, குறிப்பாக பாகிஸ்தானின் நட்பு நாடான அமெரிக்கா தீவிரமாக தேடிவந்த ஒசாமா பின் லேடனை அபோதாபாத்தில் ராணுவ கண்டோன்மென்டிற்கு அருகிலேயே பாதுகாப்பாக தங்கவைத்திருந்த வரலாறு அனைவருக்கும் தெரியும் நிலையில், ஜெனரல் அசிம் முனீரின் கருத்து பாதுகாப்பு வட்டாரங்களில் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெருக்கடி நிலை 

உள்நாட்டு நெருக்கடியில் இருந்து மக்களை திசை திரும்புவதற்கான பேச்சு

பாகிஸ்தான் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியையும், குறிப்பாக வஜீரிஸ்தான், பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வாவில் பயங்கரவாத சம்பவங்கள் அதிகரித்து வருவதையும் எதிர்கொண்டுள்ள நேரத்தில் முனீரின் அறிக்கைகள் வந்துள்ளன. காஷ்மீர் குறித்த புதுப்பிக்கப்பட்ட சொல்லாடல், உள்நாட்டு உறுதியற்ற தன்மை மற்றும் பொதுமக்களின் அதிருப்தியிலிருந்து வேண்டுமென்றே திசைதிருப்பப்படுவதற்காக மட்டுமே அசிம் முனீர் கையிலெடுத்துவதாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஜம்மு காஷ்மீர் இந்திய இறையாண்மைக்கு உட்பட்ட ஒருங்கிணைந்த பகுதியாகும். மேலும், பாகிஸ்தான் பயங்கரவாத ஏற்றுமதியை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரும்போது, அந்நாடு சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் பகுதியை திரும்ப ஒப்படைப்பது குறித்து மட்டுமே பேசப்படும் என்பதிலும் இந்தியா உறுதியுடன் உள்ளது.