ஹமாசை அடியோடு அழிக்க இஸ்ரேல் உறுதி
இஸ்ரேல்- பாலஸ்தீனிய ஆயுதக் குழுவான ஹமாஸ் இடையேயான போர் ஆறாவது நாளை எட்டியுள்ள நிலையில், ஹமாஸ் ஆயுதக் குழுவை அடியோடு வேரறுக்க இஸ்ரேல் உறுதி பூண்டுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு, ஹமாசுக்கு எதிரான போரை நடத்த அவசரகால அரசாங்கத்தை உருவாக்கியுள்ளார். மேலும் காஸா பகுதியின் மீது தரைவழி தாக்குதல் நடத்தப்படும் எனவும் அரசு சூசகமாக தெரிவித்துள்ளது. "நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்த பூமியில் இருந்து ஹமாஸ் என்ற ஒன்று அடியோடு ஒழிக்கப்படும்" என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் டேலண்ட் பிரகடனம் செய்துள்ளார். மேலும் அந்நாட்டின் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜொனாதன் கான்ரிகஸ், காஸாவில் குழந்தைகளின் தலைத்துண்டிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பரிதவிக்கும் காஸா மக்கள்
இஸ்ரேல் படைகளால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள காஸா பகுதி 23 லட்சம் மக்கள் தொகை கொண்டது. கடந்த சனிக்கிழமை ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பின், காஸா பகுதிக்கு மின்சாரம், குடிநீர் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் செல்வதை இஸ்ரேல் துண்டித்தது. காஸா பகுதியில் தற்போது சுமார் 3.5 லட்சம் பேர் வீடுகள் இழந்து தவிக்கின்றனர். காஸாவிற்கும், எகிப்திற்கும் இருந்த தரை வழி எல்லையை, எகிப்து ஏற்கனவே மூடிய நிலையில் தற்போது அகதிகளாக கூட வெளியேற முடியாமல் காஸா மக்கள் தவிக்கின்றனர்.மேலும், இஸ்ரேலின் தாக்குதலால், சுமார் 1,500க்கும் மேற்பட்ட காஸா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியர்களை மீட்க ஆபரேஷனை தொடங்கியது மத்திய அரசு
இஸ்ரேல் நாட்டில், சுமார் 18,000 இந்தியர்கள் வரை இருக்கலாம் என மத்திய அரசு ஏற்கனவே தகவல் வெளியிட்டு இருந்தது. தற்போது அவர்களை மீட்க 'ஆபரேஷன் அஜயை' மத்திய அரசு தொடங்கியுள்ளது. "சிறப்பு விமானங்கள் மற்றும் பிற ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேலில் உள்ள இந்தியர்களின் நலனை காப்பதிலும் அவர்கள் பாதுகாப்பிலும் அரசு உறுதியாக உள்ளது" என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார். இந்தியா திரும்புவதற்கு முதலில் பதிவு செய்திருந்த நபர்கள், இன்று நாடு திரும்புவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.