Page Loader
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரருக்கு இரட்டிப்பு பதவி உயர்வு வழங்கியது இந்திய ரயில்வே
துப்பாக்கிச் சுடுதல் வீரர் ஸ்வப்னில் குசேலே

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரருக்கு இரட்டிப்பு பதவி உயர்வு வழங்கியது இந்திய ரயில்வே

எழுதியவர் Sekar Chinnappan
Aug 02, 2024
08:48 pm

செய்தி முன்னோட்டம்

ஒலிம்பிக் போட்டியில் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெண்கலப் பதக்கம் வென்றதைத் தொடர்ந்து, இந்தியாவின் ஸ்வப்னில் குசேலேக்கு, வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) இந்திய ரயில்வேயில் இரட்டிப்பு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள இந்திய ரயில்வேயின் விளையாட்டுப் பிரிவு சிறப்பு பணியில், அவர் பயண டிக்கெட் பரிசோதகராக இரட்டிப்பு பதவி உயர்வு பெற்றுள்ளார். குசேலே 2015 முதல் மத்திய ரயில்வேயில் பணிபுரிந்து வருகிறார். மகாராஷ்டிராவின் கோலாப்பூர் அருகே உள்ள கம்பல்வாடி கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான அவர் 2012 முதல் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வருகிறார். எனினும், சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகி 12 ஆண்டுகள் கழித்துதான் அவர் 2024இல் ஒலிம்பிக்கில் அறிமுகமானார். தனது முதல் அறிமுகத்திலேயே பதக்கமும் வென்று பெருமை சேர்த்துள்ளார்.

தோனியுடன் ஒப்பீடு

தோனியை குறிப்பிட்டு பேசிய குசேலே

பதக்கம் வென்ற பிறகு பேசிய குசேலே, எம்எஸ் தோனியைப் போற்றுவதாகவும், தானும் அவரைப் போலவே டிக்கெட் பரிசோதகராக இருப்பதால், தன்னை அவருடன் தொடர்புபடுத்திக் கொள்ள முடிவதாகவும் கூறினார். இதுகுறித்து பேசிய அவர், "நான் துப்பாக்கிச் சுடுதலில் குறிப்பிட்ட யாரையும் பின்தொடர்வதில்லை. ஆனால், அதற்கு வெளியே, தோனியை நான் மிகவும் போற்றுகிறேன். அவர் களத்தில் இருப்பதைப் போல அமைதியாகவும் பொறுமையாகவும் இருப்பது என்பது எனது விளையாட்டுக்கு தேவைப்படுகிறது. அவருடைய வாழ்க்கையையும் நான் என்னுடன் தொடர்புபடுத்துகிறேன். அவரைப் போலவே நானும் ஒரு டிக்கெட் பரிசோதகர்." என்று கூறினார்.