ODI World Cup : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஷுப்மன் கில்லுக்கு இடமில்லை? காரணம் இதுதான்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 8) அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா தனது முதல் போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில், இதில் இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த போட்டியில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் போட்டிக்கு முன்னதாக, வெள்ளிக்கிழமை அவருக்கு டெங்கு பரிசோதனை செய்யப்படும் என்றும், அதன் அடிப்படையில் முதல் போட்டியில் அவரது பங்கேற்கு குறித்து முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது. டெங்கு பாதிப்புற்கு உள்ளானோர் பொதுவாக 7-10 நாட்கள் வரை ஓய்வில் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் ரன் மெஷினாக வலம்வரும் ஷுப்மன் கில்
2019 ஆம் ஆண்டு, நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியில் முதல்முறையாக களமிறங்கிய ஷுப்மன் கில், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவின் ரன் மெஷினாக வலம் வருகிறார். குறிப்பாக, கில் 2023 ஆம் ஆண்டு இதுவரை ஒருநாள் போட்டிகளில் 72.35 சராசரியுடன் 105 ஸ்டிரைக் ரேட்டில் 1,230 ரன்கள் எடுத்து, இந்தியாவுக்காக அதிக ரன் எடுத்தவராக உள்ளார். மேலும், அவர் இந்த ஆண்டு மட்டும் ஐந்து சதங்கள் மற்றும் ஐந்து அரைசதங்கள் அடித்துள்ளார். இந்த ஆண்டு அவரது சிறந்த ஸ்கோர் 208 ரன்கள் ஆகும். இதற்கிடையே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் கில் இல்லாத சூழ்நிலையில், இஷான் கிஷன் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.