தினமும் ஊறவைத்த வால்நட்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
நார்ச்சத்து, வைட்டமின்கள், கார்போஹைட்ரேட்டுகள், புரதம் மற்றும் இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துகளை வால்நட்கள் எனப்படும் அக்ரூட் பருப்புகள் கொண்டுள்ளன. அவற்றிலிருந்து கிடைக்கும் முழுமையான நன்மைகளை பெற, இரவு முழுவதும் அவற்றை நீரில் ஊறவைத்து காலையில் உண்ண வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஊறவைக்கப்பட்ட அக்ரூட் பருப்புகள் எளிதாக ஜீரணம் ஆவது மட்டுமின்றி, அவற்றில் உள்ள சத்துக்களை நம் உடலால் எளிதாக உறிஞ்சிக் கொள்ளவும் முடியும். இது கெட்ட கொழுப்பை குறைத்து, உடலுக்கு சக்தியை அதிகரித்து ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. அக்ரூட் பருப்புகளை ஊறவைத்து உண்ணும் போது, உடலுக்கு என்ன நன்மைகள் கிடைக்கின்றன, என்பதை இத்தொகுப்பில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
ஊறவைத்த அக்ரூட் பருப்புகள் v/s ஊறவைக்கப்படாத அக்ரூட் பருப்புகள்
அக்ரூட் பருப்புகளை ஊறவைக்கப்படாமல் உண்ணும் போது கிடைக்கும் சத்துக்களை விட, ஊறவைத்து உண்ணும் போது மேலும் அதிக சத்துக்கள் கிடைக்கின்றன. ஊறவைக்கும் போது அப்பருப்பில் உள்ள, பைடிக் அமிலம் குறைக்கிறது. அது, உடலில் சத்துக்கள் உறிஞ்சப்படுவதை அதிகரிக்கிறது. குடல் ஆரோக்கியம் சீராக இல்லாதவர்களுக்கு, ஊறவைக்கப்படாத அக்ரூட் பருப்புகள் செரிமானத்திற்கு கடினமாக இருக்கலாம். ஆனால் ஊறவைக்கப்பட்ட அக்ரூட் பருப்புகள் செரிமானத்தை எளிதாக்குகின்றன, அதே சமயம் சத்துக்களும் அதிகரிக்கின்றன.
தூக்கத்தின் தரம் மேம்படும்
உங்கள் உணவு பழக்க வழக்கத்தில் ஊறவைக்கப்பட்ட அக்ரூட் பருப்புகளை சேர்த்துக் கொள்வது, உங்கள் உடலுக்கு பல மடங்கு நன்மை பயக்கிறது. முதலில், அக்ரூட் பருப்புகள் சாப்பிடுவது உங்களுக்கு நன்றாக தூங்க உதவும், ஏனெனில் அவற்றில் மெலடோனின் என்ற ஹார்மோன் உள்ளது. மனிதர்கள் நன்றாக உறங்க மெலடோனின் என்ற ஹார்மோன் மிக முக்கியமானதாக இருப்பதாக பல வருடங்களாக நம்பப்படுகிறது. ஊறவைக்கப்பட்ட அக்ரூட் பருப்புகளை காலையில் மற்றும் இரவு உறங்கும் முன் உண்பது, உங்களுக்கு சீரான தூக்கத்தை வழங்கலாம்.
வகை-2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது
ஊறவைக்கப்பட்ட அக்ரூட் பருப்புகளை உண்பது வகை- 2 நீரழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதில் உள்ள, அதிகப்படியான நார்ச்சத்து உடலில் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. ஊறவைத்த அக்ரூட் பருப்புகள் நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமான மதிய சிற்றுண்டியாகும், ஏனெனில் அவை குறைந்த கிளைசெமிக் குறியீட்டு எண் 15 கொண்டுள்ளது. அவற்றில் உள்ள நார்ச்சத்துக்கள், இரத்த சர்க்கரை அளவை சீராக உயர வழிவகை செய்கிறது.
உடலில் அழற்சியை குறைக்கிறது
பல நீண்டகால நோய்களுக்கு முன்னோடியாக இருக்கும் அழற்சி, ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தால் தூண்டப்படலாம். இவற்றிலுள்ள பாலிபினால்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து, உங்களை நீண்ட கால நோய்கள் ஏற்படுவதில் இருந்து விலக்கி வைக்கிறது. எல்லகானின்கள் எனப்படும் பாலிபினால்களின் துணைப்பிரிவு இந்த விஷயத்தில் குறிப்பாக குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம். அவை அழற்ச்சியைகுறைக்க உதவும் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக இவற்றை கோடை காலத்தில் உட்கொள்வது மிகவும் நல்லது. ஏனெனில் இது கோடையில் ஏற்படும் அழற்சியை குறைக்க உதவும்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
ஊறவைக்கப்பட்ட அக்ரூட் பருப்புகளில் உள்ள மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், மாரடைப்பு, ஸ்டோக் உள்ளிட்ட இதய நோய்களால் நீங்கள் பாதிக்கப்படுவதை தடுக்கிறது. இது, அக்ரூட் பருப்புகள் உங்கள் உடம்பில் உள்ள தீய கொழுப்புகளை குறைப்பதால் விளைகிறது. தினமும் சுமார் 28 கிராம்(கைப்பிடி அளவு) ஊறவைத்த அக்ரூட் பருப்பை சாப்பிடுவது நல்லது. அதில் நான்கு கிராம் புரதம், இரண்டு கிராம் நார்ச்சத்து மற்றும் இரண்டரை கிராம் முக்கிய தாவர அடிப்படையிலான ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அடங்கியுள்ளது. இவை அனைத்தும் நல்ல ஆரோக்கியத்திற்கு முக்கியம்.
ஊறவைத்த அக்ரூட் பருப்புகளை சாப்பிட சரியான நேரம் எது?
ஊறவைக்கப்பட்ட அக்ரூட் பருப்புகளின் முழுமையான நன்மைகளை பெற, காலையில் எழுந்தவுடன் நீர் அருந்தியதற்கு பின்னரும், இரண்டு வேளை உணவுகளுக்கு நடுவில் சிறு தீனியாகவும் உண்ணலாம். இரவு முழுவதும் ஊற வைக்கப்பட்ட அக்ரூட் பருப்புகளை, காலையில் வெறும் வயிற்றில் உண்டால் அதிகப்படியான நன்மைகளை வழங்குவதாக நிபுணர்கள் கருதுகின்றனர். அது மட்டுமன்றி, ஊறவைத்த அக்ரூட் பருப்பை சாலடுகள் மற்றும் தானியங்களில் சேர்த்துக்கொள்வது, உங்கள் அன்றாட உணவில் சத்தான உணவை வழங்கலாம்.