இன்று காலை டெல்லியில் பிரதமரை சந்திக்கவுள்ளார் முதல்வர் ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு டெல்லி பயணப்பட்டார். அவர் இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, தமிழகத்திற்கான நிதி குறித்து வலியுறுத்தவுள்ளார். முதல்வருடன், தலைமைச் செயலர் நா.முருகானந்தம் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகளும் டெல்லிக்கு சென்றுள்ளனர். டெல்லியில் முதல்வரை, திமுக எம்.பி. டி.ஆர்.பாலு மற்றும் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
Twitter Post
இன்று டெல்லியில் முதல்வரின் நிகழ்ச்சி நிரல் இதுதான்
இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்கும் போது, தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய நிதி மற்றும் சென்னையின் மெட்ரோ ரயில் 2-வது கட்டத்திற்கான நிதியை விடுவிக்கவும் கோரப்படும். அத்துடன், மதுரை, கோயம்புத்தூர் மெட்ரோ திட்டங்களுக்கு ஒப்புதல், ஜிஎஸ்டி இழப்பீடு, நதிகளை இணைக்கும் திட்டங்களுக்கு நிதி மற்றும் ஒப்புதல் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்தும் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆளுநரின் செயல்பாடுகள் மற்றும் காத்திருக்கும் மசோதாக்கள் குறித்து ஆராயப்பட இருக்கின்றது. சந்திப்பு முடிந்ததும், சமீபத்தில் மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி வீட்டுக்கு சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துவிட்டு, மாலை 5 மணிக்கு சென்னைக்கு புறப்படுகிறார் முதல்வர் ஸ்டாலின்.