பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது ஸ்ரீவில்லிபுத்தூர் மஹிளா நீதிமன்றம்
செய்தி முன்னோட்டம்
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தி, பாலியல் தொழிலில் ஈடுபட தூண்டிய வழக்கில், பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 2 லட்சம் அபராதம் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மஹிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக இந்த வழக்கில், நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், குற்றத்திற்கான தண்டனையை இன்று வாசித்தது.
கடந்த 2018ஆம் ஆண்டு, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பெயரைக் கூறி, பாலியல் ரீதியாக மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக ஆடியோ ஒன்று வெளியானது.
இந்த விவகாரத்தில் பல அரசு அதிகாரிகள் முதல் அப்போதைய கவர்னர் பன்வாரிலால் புரோஹித் வரை தொடர்பிருப்பதாக கூறப்பட்டது.
நிர்மலா தேவி
நிர்மலா தேவி தவிர மற்ற இருவர் விடுதலை
சிபிசிஐடி விசாரணையின் அடிப்படையில், நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகிய மூவர் மீது 4 பிரிவுகளில் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மூவர் மீதும் சுமார் 1,360 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை நேற்று வழங்கியது. அதன்படி, இன்று மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.
அதே நேரத்தில், 2ஆம் மற்றும் 3 ஆம் குற்றவாளிகளான முருகன், கருப்பசாமி ஆகியோர் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம்.
இந்த வழக்கு குறித்து மேல்முறையீடு செய்யப்படும் என வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.