புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பாஜக மூத்த தலைவர் சுஷில் மோடி நேற்று இரவு காலமானார்
பீகார் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான சுஷில் மோடி, தனது 72வது வயதில் காலமானார். டெல்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில்(AIIMS) புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த ஒரு மாதமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த ஏப்ரல் 3-ம் தேதி ட்விட்டர் என அழைக்கப்படும் X என்ற சமூக வலைதளத்தில் புற்றுநோய்க்கு எதிரான தனது போராட்டத்தை மோடி பகிரங்கமாக அறிவித்தார். அதன் காரணமாகவே தான் மக்களவை தேர்தலில் பங்குபெறப்போவதில்லை எனவும் தெரிவித்திருந்தார். "கடந்த 6 மாதங்களாக புற்றுநோயுடன் போராடி வருகிறேன். இப்போது மக்களிடம் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. மக்களவைத் தேர்தலில் என்னால் எதுவும் செய்ய முடியாது" என்று அறிவித்திருந்தார்.
சுஷில் மோடிக்கு அஞ்சலிகள் குவிந்த வண்ணம் உள்ளன
நரேந்திர மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட பல பாஜக தலைவர்கள் மோடியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். "இன்று பீகார் அரசியலின் ஒரு சிறந்த முன்னோடியை என்றென்றும் இழந்துவிட்டது...அவரது மறைவால் பீகார் அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நீண்ட காலத்திற்கு நிரப்ப முடியாது" என்று அமித் ஷா தனது வருத்தத்தை தெரிவித்தார். மோடியின் பங்களிப்புகளை ராஜ்நாத் சிங் நினைவுகூர்ந்தார்,"பீகார் வளர்ச்சிக்காக அவர் செய்த பணி எப்போதும் நினைவுகூரப்படும்" என்று கூறினார். தேஜஸ்வி யாதவ், மம்தா பானர்ஜி உள்ளிட்ட அரசியல் போட்டியாளர்களிடமிருந்தும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
மாணவர் பருவத்திலேயே துவங்கிய அரசியல் பயணம்
1970-களில் பாட்னா பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தபோதே மோடி அரசியலில் ஈடுபட்டார். 1990ல் பாட்னா மத்திய தொகுதியில் இருந்து முதன்முதலாக எம்எல்ஏ ஆனார். பின்னர், 1996 முதல் 2004 வரை, பீகார் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றினார். 2004இல், அவர் பாகல்பூரில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த ஆண்டு, அவர் மக்களவையில் இருந்து ராஜினாமா செய்து சட்டமன்றக் குழுவில் சேர்ந்தார், அதன் பிறகு அவர் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். அவர் 2020இல் ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2022 ஆம் ஆண்டில்,"அனைத்து மோடிகளும் திருடர்கள்" என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அறிக்கைக்காக, ராகுலின் பேச்சு, மோடியின் குடும்பப் பெயரைக் கொண்டவர்களை இழிவுபடுத்துகிறது எனக் கூறி, அவர் மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடுத்தார் சுஷில் மோடி.