
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜூலை 5ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழைச் சூழ்நிலை நிலவுவதால், ஜூலை 5ஆம் தேதி வரை சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: தென்மேற்கு பருவமழையின் தாக்கத்தால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று (ஜூன் 29) மதியம் வரை, கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 9 செ.மீ. அதிகபட்ச மழை பதிவாகியுள்ளதுடன், வால்பாறை, சோலையார் (கோவை), பெரியாறு (தேனி) பகுதிகளில் தலா 5 செ.மீ. மற்றும் விருத்தாசலம் (கடலூர்) பகுதியில் 4 செ.மீ. மழை பெய்துள்ளது.
வெப்பநிலை
தமிழகத்தின் பல பகுதிகளில் 3 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும்
மேற்குத் திசை காற்றின் வேகத்தில் ஏற்பட்டுள்ள மாறுபாட்டால், ஜூன் 30 முதல் ஜூலை 5 வரை தமிழகத்திலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. மேலும், இன்று மற்றும் நாளை சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் பதிவாகக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்; சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.