
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் நாளை திறப்பு - முதல்வர் திறந்து வைக்கிறார்
செய்தி முன்னோட்டம்
சென்னை கோயம்பேடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கிலும்,
தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் மக்களின் வசதிகளை கருத்தில் கொண்டும் வண்டலூர் அருகேயுள்ள கிளாம்பாக்கம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணியானது கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கப்பட்டது.
ரூ.393 கோடியே 74 லட்சம் மதிப்பில் 88.52 ஏக்கரில் 59.86 ஏக்கர் நிலப்பரப்பில் நவீன தொழில்நுட்பம் கொண்டு இந்த கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.
இந்த பேருந்து நிலையத்திற்குள் தனி காவல் நிலையம், பூங்கா உள்ளிட்டவைகளும் இடம்பெற்றுள்ளது.
திறப்பு விழா
மின் விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட பேருந்து நிலையம்
இதன் கட்டுமான பணிகள் முன்னதாகவே நிறைவடைந்த நிலையில், பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வந்து செல்ல ஏதுவாக வழிபாதைகள் அமைக்கும் பணி, மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் உள்ளிட்டவை நடந்து வந்தது.
அந்த பணிகளும் தற்போது நிறைவடைந்ததாக கூறப்படும் நிலையில், நாளை(டிச.,30) கிளம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படவுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
அதன்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதனை திறந்து வைக்கவுள்ளார் என்பதால் தற்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், பேருந்து நிலையம் முழுவதும் மின் விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.
இந்த திறப்பு விழா ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் சேகர் பாபு கடந்த 26ம் தேதி போக்குவரத்து காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.