மேகதாது அணைக்கான ஆயத்த பணிகள் நிறைவு; கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
மாநில அரசின் பட்ஜெட் அறிக்கை தாக்களின்போது வெள்ளிக்கிழமை (மார்ச் 7) இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் இந்த திட்டம் தொடங்கும் என்று அவர் உறுதிப்படுத்தினார்.
மேகதாது அணை திட்டம் கர்நாடகாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நீண்டகாலமாக சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்து வருகிறது.
இந்த அணை குடிநீர் விநியோகத்தை அதிகரிக்கவும், மழைக்காலங்களில் அதிகப்படியான வெள்ள நீர் ஓட்டத்தை நிர்வகிக்கவும் உதவும் என்று கர்நாடகா வாதிடுகிறது.
தமிழ்நாடு
தமிழ்நாடு எதிர்ப்பு
அதே நேரத்தில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், தமிழக விவசாயிகளுக்கு நீர் கிடைப்பது குறைந்து மாநிலத்தில் நீர் பற்றாக்குறையை அதிகரிக்கும் என தமிழ்நாடு இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்துள்ளது.
இந்த திட்டம் காவிரி நீர் தகராறு தீர்ப்பாயத்தின் தீர்ப்பை மீறுவதாகவும், கீழ் ஆற்றங்கரை மாநிலத்தில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளை மோசமாக பாதிக்கும் என்றும் தமிழக அரசு பலமுறை கவலைகளை எழுப்பியுள்ளது.
இந்நிலையில், சித்தராமையாவின் தற்போதைய அறிவிப்பு மற்றொரு அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, மத்திய அரசைப் பொறுத்தவரை தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் காவிரியின் கர்நாடக பகுதியில் எந்த புதிய அணைக்கும் அனுமதி கிடையாது என்பதை ஏற்கனவே உறுதியாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.