Page Loader
கனமழை எதிரொலி: புதுச்சேரியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
புதுச்சேரியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எதிரொலி: புதுச்சேரியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

எழுதியவர் Sekar Chinnappan
Oct 19, 2024
08:56 am

செய்தி முன்னோட்டம்

கனமழை காரணமாக புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (அக்டோபர் 19) விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அ.நமச்சிவாயம் அறிவித்துள்ளார். தென்மேற்குப் பருவமழை முடிவடைந்ததைத் தொடர்ந்து, அக்டோபர் 15ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. வரும் நாட்களில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடையும் என்று வானிலை முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன. வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல இடங்களில் மழை பெய்து வருவதால், அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை

புதுச்சேரிக்கான வானிலை அறிக்கை

இந்திய வானிலை ஆய்வு மையம் வடக்கு அந்தமான் கடலில் மேல் காற்று சுழற்சி உருவாகும் என்றும், இது அக்டோபர் 22 ஆம் தேதிக்குள் மத்திய வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வழிவகுக்கும் என்றும் கணித்துள்ளது. இந்த வானிலை அமைப்பு வடமேற்கு பகுதிகளில் நகர்ந்து வலுப்பெற்று, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அடுத்த சில நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும், அக்டோபர் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்றும் வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.