
இந்தியாவிற்கு எதிராக திட்டமிடப்பட்ட 48 மணி நேர தாக்குதல் திட்டத்தை 8 மணி நேரத்திலேயே நிறுத்திய பாகிஸ்தான்; ஏன்?
செய்தி முன்னோட்டம்
"இந்தியாவை 48 மணி நேரத்தில் வீழ்த்தும் திட்டத்துடன் இறங்கிய பாகிஸ்தான், இந்தியாவின் கடுமையான பதிலடி காரணமாக, 8 மணி நேரத்தில் போரை நிறுத்த கெஞ்சியது," என்று முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் புனே பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கடந்த மாதம் 7ஆம் தேதி தொடங்கிய பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் முயற்சி குறித்து விளக்கம் அளித்தார்.
"தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி வரும் என்பதை முன்னதாகவே எச்சரித்தோம். 10ஆம் தேதி நள்ளிரவில் பாகிஸ்தான், 48 மணி நேரத்தில் இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் தாக்குதல் நடத்தியது. ஆனால், இந்தியா எட்டு மணி நேரத்திலேயே அந்த முயற்சியை முற்றிலும் முறியடித்தது," என்றார் அவர்.
கோரிக்கை
போரை நிறுத்த கோரிக்கை விடுத்த பாகிஸ்தான்
இந்திய விமானப்படை மற்றும் ராணுவம், பயங்கரவாத முகாம்கள் மீது மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும், அதற்குப் பதிலாக பாகிஸ்தான் எல்லை முழுவதும் தாக்குதல்களை பெரிதாக்கியதாகவும் கூறினார்.
இந்தியாவின் துல்லியமான தாக்குதல் காரணமாக, பாகிஸ்தான் தரப்பிலிருந்து "போருக்கு இடைவேளை வேண்டுமென்று" தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டது என சவுகான் கூறினார்.
"இவ்வாறான தீர்மானங்களை எடுப்பதற்கான அனுபவத்தை, 'ஆபரேஷன் பராக்ரம்' (2001) மூலமாக நாம் பெற்றிருந்தோம்" என்று அவர் கூறினார்.
தற்போதைய பதிலடி நடவடிக்கையான 'ஆபரேஷன் சிந்தூர்' இன்னும் முடியவில்லை என்றும், பாதுகாப்பு பணிகள் தொடரும் என்றும் சவுகான் குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கை, தாக்குதல்களை துல்லியமாக குறிவைத்து நடத்திய ஒரு முக்கியமான ராணுவ சாதனை என்றும் அவர் வலியுறுத்தினார்.
பதற்றம்
தோல்வி குறித்து பதறிய பாகிஸ்தான்
"பாகிஸ்தான் இந்த முடிவு வர யூகங்களின் அடிப்படையில் இரண்டு காரணம் இருக்கலாம்- ஒன்று, அவர்கள் ஏற்கனவே அனைத்தையும் இழந்து கொண்டு இருந்தனர். இரண்டாவது, இந்தியாவின் தாக்குதல் தொடர்ந்தால், இழப்பு கணிசமாக அதிகரிக்கும். அதனால் தான் போரை நிறுத்தும் முடிவை எடுத்தனர்," என்றார் சவுகான்.
பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர் இந்தியாவிற்கு எதிராக பேசிய 'தண்ணீரும், ரத்தமும் ஒன்றாக பாய முடியாது' என்ற வார்த்தைக்கு பதிலளிப்பாக, இந்தியா பயங்கரவாதத்தை எதிர்த்து கடுமையான நடவடிக்கையை எடுத்திருப்பதாகவும், அது புதிய வரலாறு எழுதும் வகையில் செயல்பட்டிருப்பதாகவும் முப்படை தளபதி சவுகான் கூறினார்.