ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு சொந்தமான 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
சென்னை, தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். கிட்டத்தட்ட 40 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களுக்கு சொந்தமான இடங்களில் நடைபெறும் இந்த சோதனை, சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததற்காக நடைபெறுகிறது என கூறப்படுகிறது. சென்னை ஓஎம்ஆர், தி.நகர், போன்ற இடங்களில் செயல்படும் பிரபலமான ரியல் எஸ்டேட் அதிபர் சண்முகம் வசிக்கும் இல்லத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தொடர்ச்சியாக வருமானவரி துறையினரும், அமலாக்க துறையினரும் பல்வேறு நபர்களை குறி வைத்து சோதனை நடத்தி வருவது வாடிக்கையாகி விட்டது என்ற பேச்சும் எழாமல் இல்லை.