
சென்னை தொடர் செயின் பறிப்பு கொள்ளையன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
செய்தி முன்னோட்டம்
சென்னையில் தொடர்ச்சியான செயின் பறிப்பில் ஈடுபட்டதாக கூறி நேற்று கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள் இருவரில் ஒருவர், இன்று அதிகாலை போலீசாரின் என்கவுன்ட்டரில் உயிரிழந்தார்.
சென்னையில் கடந்த (மார்ச் 25) திங்கட்கிழமை ஒரே நாளில் ஏழு இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
ஈஞ்சம்பாக்கம் பெத்தேல்நகர், அடையாறு சாஸ்திரி நகர், அடையாறு இந்திரா நகர், கிண்டி எம்ஆர்சி போன்ற பகுதிகளில் இந்த சம்பவங்கள் நடைபெற்றன.
இந்த சம்பவத்தில் துரிதமாக செயல்பட்ட சென்னை காவல்துறை சில மணிநேரத்திலேயே கொள்ளையர்களை விமான நிலையத்தில் தப்பி ஓடவிருந்த நேரத்தில் கைது செய்தனர்.
அவர்கள் திருடிய நகைகளை மீட்க செல்லும்போது இந்த என்கவுண்டர் நடந்துள்ளது.
கைது
தனிபடை அமைத்து கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்
திங்கள் காலை 6 மணி முதல் 7.10 மணிக்குள், ஒரு மணி நேரத்தில் மூதாட்டிகளை குறிவைத்து தொடர்ந்த பணப்பறிப்பு சம்பவங்கள் அதிர்ச்சியூட்டின.
குற்றவாளிகளை பிடிக்க, காவல் ஆணையர் அருணின் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை, சம்பவ இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் பல்வேறு இடங்களில் தேடுதல் மேற்கொண்டது.
இதனடிப்படையில், செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் 2 பேர் என தெரியவந்தது.
அவர்கள் சென்னை விமான நிலையம் நோக்கி புறப்பட்டதை அறிந்த காவல்துறையினர், விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன் பின்னர், ஐதராபாத் மற்றும் மும்பை விமானங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.
அங்கே போலீசாரின் பரிசோதனையில் சந்தேகத்திற்கு இடமான இரண்டு கொள்ளையர்களும் கைது செய்யப்பட்டனர்.
என்கவுண்டர்
உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த கொள்ளையர்கள் என கண்டுபிடிப்பு
இந்த இரு கொள்ளையர்களும் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்தது.
மேலும் அவர்கள் தொடர் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் எனவும் உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்த செயின் பறிப்பு சம்பவங்களின் மூளையாக செயல்பட்ட ஜாபர் குலாம் ஹுசைன் இன்று அதிகாலை போலீசாரின் என்கவுன்ட்டரில் சுடப்பட்டு உயிரிழந்தார்.
கொள்ளையர்கள் தரமணி ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள இடத்தில் நகைகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாரிடம் கூறினார்.
பதுக்கி வைக்கப்பட்ட நகைகளை மீட்க ஜாபர் குலாம் ஹுசைனை போலீசார் அழைத்து சென்றுள்ளார்.
அப்போது, அவர் போலீசாரை தாக்கிவிட்டு தப்புவதற்காக முயற்சித்தார். அப்போது காவல்துறையினரால் அவர் சுட்டுகொல்லப்பட்டார்.
ஜாபர் குலாம் ஹுசைன் மீது நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவானதாகவும் கூறப்படுகிறது.