நவம்பர் 30 வரை இஸ்ரேலுக்கு செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிக் குழுவிற்கும் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் டெல் அவிவ் நகருக்கான தனது திட்டமிடப்பட்ட விமானங்களை நவம்பர் 30 ஆம் தேதி வரை நிறுத்தி வைத்துள்ளது. கடந்த அக்டோபர் 7ஆம் தேதி, இஸ்ரேஸ் மீது பாலஸ்தீன போராளிக்குழுவான ஹமாஸ் திடீர் தாக்குதலை நடத்தியது. இதனால், 1400க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கத்தோடு இஸ்ரேல் 4 வாரங்களாக பாலஸ்தீன மக்கள் வாழும் காசா பகுதி மீது தாக்குதல் நடத்தி வருகிறது. 4 வாரங்களாக இஸ்ரேல், பாலஸ்தீனர்கள் மீது நடத்தி வரும் தாக்குதலில் 9500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
டெல்லி-டெல் அவிவ் விமானங்கள் ரத்து
அக்டோபர் 7ஆம் தேதி இந்த போர் தொடங்கியதில் இருந்து டெல் அவிவ்(இஸ்ரேல் தலைநகர்) தொடர்பான எந்த விமானத்தையும் ஏர் இந்தியா நிறுவனம் இயக்கவில்லை. இந்நிலையில், "டெல் அவிவ் நகருக்கான விமானங்கள் நவம்பர் 30 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன" என்று ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பொதுவாக, ஏர் இந்தியா நிறுவனம் டெல்லியில் இருந்து டெல் அவிவ் வரை ஐந்து வாராந்திர விமானங்களை இயக்கி வந்தது. திங்கள், செவ்வாய், வியாழன், சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இந்த விமான சேவைகள் வழங்கப்பட்டன. இந்த விமான சேவைகள் அனைத்தும் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.