
கனடா மற்றும் அமெரிக்காவின் கொலை குற்றசாட்டுகள் குறித்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர்
செய்தி முன்னோட்டம்
காலிஸ்தான் ஆதரவாளர்களை கொலை செய்ய இந்தியா சதித்திட்டம் தீட்டியதாக அமெரிக்காவும் கனடாவும் குற்றம்சாட்டியுள்ள நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று அது குறித்து பேசி இருக்கிறார். இன்று செய்தி நிறுவனமான ANI இடம் பேசிய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், "இரண்டு பிரச்சினைகளும் ஒரே மாதிரியானவை அல்ல. நாங்கள் மிகவும் பொறுப்பானவர்களாகவும், என்ன செய்கிறோம் என்பதில் மிகவும் கவனமாகவும் இருக்கிறோம்" என்று கூறியுள்ளார். "இரண்டு பிரச்சினைகளும் ஒரே மாதிரியானவை அல்ல. அந்தப் பிரச்சினையை எங்களிடம் கொண்டுவந்தபோது, அமெரிக்கர்கள் சில குறிப்பிட்ட விஷயங்களை தெளிவாக சொன்னார்கள். ஆனால், கனேடியர்கள் தகுந்த ஆதாரங்களை கொடுக்கவில்லை. சர்வதேச உறவுகளில் அவ்வப்போது இதுபோன்ற சவால்கள் எழலாம்." என்று மேலும் அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
டக்ஜ்வ்க்
இந்திய-கனடா உறவுகளில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனை
காலிஸ்தான் ஆதரவாளரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனையடுத்து, அவரது கொலையில் இந்திய அரசாங்கத்திற்கு நேரடி தொடர்பு இருப்பதாக கனட அரசாங்கம் பெரும் குற்றசாட்டை முன்வைத்தது. இதனால், இந்திய-கனட உறவுகள் சிதைந்துள்ளன. இதற்கிடையில், இன்னொரு காலிஸ்தான் பயங்கரவாதியான குர்பத்வந்த் சிங் பன்னூனை அமெரிக்காவில் வைத்து கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டதாகவும், அந்த சதி திட்டத்தில் இந்தியாவின் பங்கு இருப்பதாகவும் அமெரிக்கா சந்தேகிக்கிறது. எனவே, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் இந்தியாவுக்கு எதிரான குற்றசாட்டுகளை தனித்தனியாக விசாரித்து வருகின்றன. அமெரிக்காவின் விசாரணைக்கு இந்தியா ஒத்துழைத்து வருகிறது. ஆனால், கனடாவின் விசாரணைக்கு ஒத்துழைக்க இந்தியா முன்பு மறுத்துவிட்டது.