இயக்குனர் விக்ரமனின் மனைவிக்கு தேவையான சிகிச்சை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
தனியார் மருத்துவமனை அளித்த தவறான சிகிச்சையால், உடல்நல குறைவு ஏற்பட்டு, 5 ஆண்டுகளாக படுக்கையில் இருக்கும் இயக்குனர் விக்ரமனின் மனைவிக்கு, தேவையான சிகிச்சை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு, சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், 15க்கும் மேற்பட்ட மருத்துவர் குழு உடன் சென்று, அவருக்கு பரிசோதனைகள் மேற்கொண்டு தொடர் சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அந்த மருத்துவ குழுவில் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் உள்ளிட்டோர் இருந்தது குறிப்பிடத்தக்கது.
முதல்வரின் உத்தரவை அடுத்து, இயக்குனர் விக்ரமனின் வீட்டுக்கு நேரில் சென்ற அமைச்சர் சுப்பிரமணியன்
உடல்நிலை பாதிப்படைந்த விக்ரமனின் மனைவி
தமிழ் சினிமாவில் வானத்தைப்போல, பூவே உனக்காக, சூரியவம்சம் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் விக்ரமனின் மனைவி ஜெயப்பிரியா, குச்சிப்புடி கலைஞர் ஆவார்.தமிழ்நாட்டில் இவர் 4,000 மேடைகளுக்கு மேல் நடனமாடியுள்ளார். இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தனியார் மருத்துவமனை அளித்த தவறான சிகிச்சையால் இவரின் உடல்நலம் பாதிக்கப்பட்டு, 5 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருப்பதாக, இயக்குனர் விக்ரமன் சமீபத்தில் அளித்திருந்த நேர்காணலில் தெரிவித்திருந்தார். மேலும் ஜெயப்பிரியாவிற்கு உடலில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கும் நிலையில், சிறுநீரக பிரச்சனையாலும் அவதிப்பட்டு வருகிறார். இவரின் மருத்துவ செலவிற்காக இயக்குனர் விக்ரமன், தனது சொத்துக்களை ஒவ்வொன்றாக விற்று வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் விக்ரமனின் வைரல் நேர்காணலைப் பார்த்த முதல்வர், இவருக்கு உதவ தரவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.