LOADING...
டெஹ்ரானில் பெய்த கறுப்பு மழை! அமெரிக்கா-ஈரான் போரினால் அடுத்த சில தசாப்தங்களுக்கு நீடிக்கப்போகும் சுற்றுச்சூழல் பாதிப்பு
அமெரிக்கா-ஈரான் போரின் கோர முகம்

டெஹ்ரானில் பெய்த கறுப்பு மழை! அமெரிக்கா-ஈரான் போரினால் அடுத்த சில தசாப்தங்களுக்கு நீடிக்கப்போகும் சுற்றுச்சூழல் பாதிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Mar 15, 2026
10:59 am

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர், ராணுவ மற்றும் அரசியல் ரீதியான மாற்றங்களை மட்டுமின்றி, அந்தப் பிராந்தியத்தின் இயற்கையைச் சிதைக்கும் ஒரு பெரும் சுற்றுச்சூழல் நெருக்கடியையும் உருவாக்கியுள்ளது. டெஹ்ரானில் பெய்யும் நச்சுத்தன்மை வாய்ந்த கறுப்பு மழை முதல் பாரசீக வளைகுடாவில் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவு வரை இதன் பாதிப்புகள் மிகத் தீவிரமாக உள்ளன. கூடுதல் விவரங்கள் இங்கே:-

அதிர்ச்சி

டெஹ்ரானில் 'கறுப்பு மழை'

அண்மையில் டெஹ்ரான் அருகே உள்ள எண்ணெய் கிடங்குகள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களால், வானத்தை நோக்கி அடர்ந்த கரும்புகை எழுந்தது. எரிந்த எண்ணெயிலிருந்து வெளிப்பட்ட கரியமிலத் துகள்கள் மற்றும் ரசாயனங்கள் மேகங்களுடன் கலந்து, கறுப்பு நிறத்தில் மழையாகப் பெய்தது. இந்த மழையினால் அப்பகுதி மக்களுக்குத் தலைவலி, சுவாசப் பிரச்சினைகள் மற்றும் கண்கள், தொண்டையில் எரிச்சல் போன்றவை ஏற்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

அச்சுறுத்தல்

பாரசீக வளைகுடாவிற்கு ஏற்படும் அச்சுறுத்தல்

உலகின் மிக முக்கியமான எரிசக்தி வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் பாரசீக வளைகுடா பகுதிகளில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கப்பல்கள் இலக்கு வைக்கப்படுகின்றன. தாக்குதலுக்குள்ளாகும் கப்பல்களில் இருந்து கசியும் கச்சா எண்ணெய், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் மீன்பிடித் தொழிலைக் கடுமையாகப் பாதிக்கும் என லண்டனின் 'குவீன் மேரி' பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் பயன்படுத்தும் அதிகப்படியான எரிபொருள், வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயுக்களின் அளவை பல மில்லியன் டன்களாக உயர்த்தியுள்ளது.

Advertisement

நச்சுக்கள்

புதைந்து கிடக்கும் நச்சுக்கள்

போர்க்களத்தில் பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளில் இருந்து வெளியேறும் கன உலோகங்கள் மற்றும் நச்சு ரசாயனங்கள் மண் மற்றும் நிலத்தடி நீரை மாசுபடுத்துகின்றன. 1991இல் நடந்த வளைகுடா போரின் போது எரிக்கப்பட்ட குவைத் எண்ணெய் கிணறுகள் ஏற்படுத்திய பாதிப்புகளைப் போலவே, தற்போதைய போரும் அடுத்த சில தசாப்தங்களுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என 'CEOBS' அமைப்பு தெரிவித்துள்ளது. போர் முடிந்தாலும், சிதைந்த கட்டடங்களை அகற்றுவதும், மீண்டும் கட்டமைப்பதும் வளிமண்டலத்தில் பல கோடி டன் கரியமில வாயுவை வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

நிலைப்பாடு

உலக நாடுகளின் நிலைப்பாடு

எரிபொருள் விலை உயர்வால், பல நாடுகள் தங்களது பருவநிலை இலக்குகளை ஓரங்கட்டிவிட்டு, பொருளாதாரத்தைச் சமாளிக்க எரிபொருள் மானியங்களை வழங்கத் தொடங்கியுள்ளன. இது சர்வதேச அளவில் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தைப் பின்னடையச் செய்துள்ளது. அமெரிக்கா தொடங்கிய ஈரான் போரின் உண்மையான விலை, நிலப்பரப்பை மீட்பதில் இல்லை, மாறாக அந்தப் பிராந்தியத்தின் காற்று, மண் மற்றும் கடலில் படிந்துள்ள நச்சுத்தன்மையில்தான் உள்ளது என ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Advertisement